ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பிரான்ஸ், ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்!

பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளது குறித்து...

wildfires in France and Spain

பிரான்ஸ், ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ - கோப்புப்படம்

Published On :25 ஜூலை 2026, 10:30 am IST

பிரான்ஸ்: தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத்தீ அதிவேகமாக பரவிவரும் நிலையில், சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்; சிலர் படகுகள் மூலம் வெளியேறியுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பிரான்ஸ் மற்றும் மத்திய ஸ்பெயினில் ஏற்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ காரணமாக சுமார் 2,00,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். தீ கட்டுப்பாடின்றி பரவியதால், மாட்ரிட் மற்றும் போர்டோ நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

அதிக வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றத்தின் நீண்டகால விளைவுகளால் தீவிரமடைந்த இந்தத் தீயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதில் தீயணைப்பு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சவால்கள் நிலவுகின்றன. பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாகத் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

தீயின் வேகம் மிக தீவிரமாக இருப்பதால், அதை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை என்று ஸ்பெயின் நாட்டு தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களை தீ சூழ்ந்தபோது, ​​சிலர் படகுகள் மூலமாக அங்கிருந்து தப்பினர்.

2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

பிரான்ஸின் ஜிரோண்டே மற்றும் லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறியதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய ஸ்பெயினில் 60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த காட்டுத் தீயில் 53 வீடுகள், ஒரு முகாம் எரிந்து நாசமானதாகவும், 42 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக ஜிரோண்டே மாகாணத்தின் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருகிலுள்ள வனப்பகுதிகளிலிருந்து பெரும் புகை மூட்டம் எழுந்த நிலையில், மக்கள் கார்களில் வெளியேறினர். காவலர்கள் வீடு வீடாகச் சென்று வெளியேறுமாறு அறிவுறுத்தியதால் பதற்றமான சூழல் நிலவியது; இருப்பினும், நல்வாய்ப்பாக, இரு நாடுகளிலும் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தென்மேற்கு பிரான்ஸில் பரந்த நிலப்பரப்பை அழித்த மிகப்பெரிய காட்டுத்தீ, போா்டியக்ஸ் நகருக்கு தென்மேற்கே லேஜ் கேப்-ஃபெரெட்டைச் சுற்றியுள்ள வனப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் தெரிவித்துள்ளார்.

கேப் ஃபெரெட் தீபகற்பப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றக் காரணமான இந்த காட்டுத்தீ 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவியுள்ளதாகவும், ஜிரோண்டே பகுதியில் 1,10,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறியுள்ளதாக கூறினார்.

பலத்த காற்று மற்றும் சீரற்ற வானிலை காரணமாகத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்று நுனெஸ் கூறினார். தீயானது தற்போது கிழக்கு நோக்கி, போர்டோ பெருநகரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஜிரோண்டேவில் கடந்த மூன்று நாள்களாக நாங்கள் எதிர்கொண்டு போராடிவரும் இந்த காட்டுத்தீ, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெரும் தீவிரத்தை எட்டியுள்ளது," என்றும் காட்டுத் தீயின் தீவிரத்தை எதிர்த்துப் போராடுவதற்கு, தேசிய அளவிலான உதவியை நாடுவோம் என நியூவெல் அக்விடைன் மாகாண ஆளுநர் சோஃபி ப்ரோகாஸ் கூறியுள்ளார்.

லாண்டெஸில் காட்டுத்தீ

லாண்டெஸில் மற்றொரு காட்டுத்தீ ஏற்பட்டது, இதனால் 31,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரான்சில் ஏற்பட்ட இந்த இரண்டு தீ விபத்துகளுக்கும் தற்செயலான காரணங்களே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரநிலையை அறிவிப்பு

ஸ்பெயினில், மாட்ரிட் மற்றும் அருகிலுள்ள அவிலா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாகத் தலைநகருக்கு மேற்கே உள்ள நகரங்களிலிருந்து சுமார் 60,000 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், அரசு முதன்முறையாக தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.

வெப்ப அலை காரணமாகத் தீயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்றிலே மோசமான தீ விபத்து

மாட்ரிட் அருகே ஏற்பட்ட இரண்டு பெரிய தீ விபத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் 30 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

இது மாட்ரிட் வரலாற்றிலேயே மிக மோசமான தீ விபத்து என்று தெரிவித்துள்ள மாட்ரிட் பிராந்தியத்திற்கான மத்திய அரசின் பிரதிநிதியான பிரான்சிஸ்கோ மார்ட்டின், மேலும் 20 ஆயிரம் பேரைத் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை வெளியேற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும், தற்போது 'சான்' நகரை காப்பதே முக்கியமானது என்று மார்ட்டின் கூறியுள்ளார்.

"போர்டோவிலிருந்து 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் உள்ள கேப் ஃபெரெட் தீபகற்பத்திற்கு அருகே புதன்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்தால், இதுவரை 5,900-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

அதிவேகமாக பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். 

Massive forest fires forced the evacuation of some 200,000 people in southwestern...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.