டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

ரஷிய கச்சா எண்ணெய் விநியோகத்தை உடனடியாகச் சீரமைக்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி, மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை

News image
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
Updated On :21 பிப்ரவரி 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் உடனடியாகச் சீரமைத்து தொடங்காவிட்டால், உக்ரைனுக்கு வழங்கப்படும் முக்கிய நிதி மற்றும் மின்சார உதவியைத் தடுத்து நிறுத்துவோம் என்று ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உக்ரைன் போரை முன்னிட்டு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால், ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும் தங்கள் எரிசக்தி தேவைக்காக இப்போதும் ரஷியாவையே நம்பியுள்ளன. எனவே, அந்நாட்டுடன் இணக்கமான உறவைப் பேணி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில், உக்ரைன் வழியாக இந்த நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் குழாய்கள் சேதமடைந்து, எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

ரஷியாவின் ட்ரோன் தாக்குதலிலேயே எண்ணெய் குழாய்கள் சேதமடைந்ததாக உக்ரைன் கூறுகிறது. ஆனால், இதனை ஏற்க மறுக்கும் ஹங்கேரியும் ஸ்லோவாகியாவும், அரசியல் காரணங்களுக்காக உக்ரைன் திட்டமிட்டே விநியோகத்தைத் தடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றன.

மாற்றுப் பாதைகளில் எண்ணெய்யைக் கொண்டு வர உக்ரைன் முன்மொழிந்தாலும், பழைய வழித்தடத்திலேயே விநியோகம் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்த இரு நாடுகளும் பிடிவாதமாக உள்ளன.

‘கடனுதவியைத் தடுப்போம்’...: உக்ரைன் இவ்விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்காவிட்டால், அந்நாட்டின் ராணுவ மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக ஐரோப்பிய யூனியன் வழங்கத் திட்டமிட்டுள்ள 9,000 கோடி யூரோ மதிப்பிலான வட்டியில்லா கடனுதவியைத் தடுத்து நிறுத்தப்போவதாக ஹங்கேரி வெளியுறவு அமைச்சா் பீட்டா் சிஜாா்டோ அறிவித்துள்ளாா்.

‘மின்சாரத்தை நிறுத்துவோம்’...: இதே விவகாரத்தில் ஸ்லோவாகிய பிரதமா் ராபா்ட் ஃபிகோவும் உக்ரைனுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். வரும் திங்கள்கிழமைக்குள் ரஷிய எண்ணெய் விநியோகம் சீராகாவிட்டால், உக்ரைனுக்குத் தடையின்றி வழங்கப்பட்டு வரும் அவசரகால மின்சாரத்தை உடனடியாக நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளாா்.

உக்ரைனின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் சுமாா் 18 சதவீதத்தை ஸ்லோவாகியா வழங்கி வருகிறது. ஏற்கெனவே, போரினால் மின்சாரக் கட்டமைப்பு சிதைந்துள்ள நிலையில், ஸ்லோவாகியாவின் இம்முடிவு உக்ரைனுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.