
ஸ்பெயினுக்குள் நுழையும் மொராக்கோ அகதிகள்: பலி எண்ணிக்கை 67-ஆக உயர்வு!
மொராக்கோவில் இருந்து கடல்வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்கு வந்த அகதிகளில் இதுவரை 67 பேர் பலியானதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் சீயடா நகருக்குள் கடல்வழியே செல்ல முயலும் மக்கள். - AP
மொராக்கோவில் இருந்து கடல்வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குச் சென்ற அகதிகளில் இதுவரை 67 பேர் பலியானதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. நீரில் மூழ்கியும் நெரிசலில் சிக்கியும் அவர்கள் பலியாகியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் கடுமையான பஞ்சம் மற்றும் உள்நாட்டு மோதல்களால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறி வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் கடல் வழியாக ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக நீந்தி எல்லைகளுக்குள் நுழைகின்றனர்.
ஸ்பெயின் எல்லையில் உள்ள சீயடா, வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட நகரம் ஆகும். மொராக்கோவை எல்லையாகக் கொண்ட இந்நகரம், மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இடையேயான எல்லையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் ஸ்பெயின் நீதிமன்றம், ’ஸ்பெயினுக்குள் கடல் வழியாக வரும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பாமல், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்று ஒரு தீா்ப்பை வழங்கியது.
இத்தீா்ப்பு தவறாகச் சித்திரிக்கப்பட்டு, ‘கடலில் நீந்தி சீயடா எல்லைக்குள் நுழைந்து விட்டால், மொராக்கோவுக்கு யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டாா்கள்’ என்று வதந்தியாகப் பரவியதால் சீயடாவுக்குள் நுழைய மொராக்கோ மக்கள் பலரும் கடலில் நீந்திச் சென்றுள்ளனர். அதில், 67 பேர் பலியாகினர்.
இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட அகதிகள் கடந்த சில நாள்களில் ஸ்பெயினுக்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கடலுக்குள் உள்ள அலைத் தடுப்பு வேலியை ஒட்டி சுமார் 500 மீட்டர் நீளமுள்ள தடுப்புச் சுவரை அமைக்கவிருப்பதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சீயடா நகருக்குள் நுழைந்த பல அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, இது ஸ்பெயின் அரசுக்கு சவாலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வெறும் 84,000 மக்கள்தொகை மட்டுமே கொண்ட சீயடா நகருக்குள் 60,000 அகதிகள் நுழைந்துள்ளது, அங்குள்ள மக்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீயடா நகரின் தலைவர் இதுபற்றிப் பேசுகையில், "இந்தச் சம்பவத்தால் நகரத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அகதிகளைத் திருப்புயனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரும் திருப்பியனுப்பப்படுவார்கள்," என்று கூறினார்.
அகதிகளில் பலர் மொராக்கோவிற்கு திரும்புவதை விரும்பவில்லை. அதில் ஒருவர் பேசுகையில், ”எங்களை எங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்துவதற்கு, நாங்கள் சாப்பிடக்கூட முடியாதபடி அனைத்து கடைகளையும் மூடிவிட்டார்கள். அவர்கள் மூடினாலும் பரவாயில்லை. பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இங்கேயே தான் இருப்போன்” என்று கூறினார்.
Summary
Moroccan migrants entering Spain: Death toll rises to 67!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







