/

நேபாள விமான விபத்து: இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்

நேபாள விமான விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.

News image
நேபாள விமான விபத்து: இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:45 pm

PTI

நேபாள விமான விபத்தில் பலியான இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதுவரை அவர்களுக்கு 25 உடல்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.  அதில் அவர்களது உறவினர்கள் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர்.

இதனால், வரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மேலும் சில உடல்கள் அவர்களுக்குக் காண்பிக்கப்படும். அதிலும் அவர்களது உறவினர்களை அடையாளம் காண முடியாவிட்டால், டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு, பிறகுதான் உடல்களை அடையாளம் காணும் நிலை ஏற்படலாம். இதனால், நேபாள விமான விபத்தில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊர் கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

நேபாளத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பொகாரா விமானநிலையம் அருகே பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில் 71 போ் உயிரிழந்தனா்.

இதில் 6 குழந்தைகளும், 25 பெண்களும் அடங்குவா். கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடைபெற்ற மோசமான விமான விபத்து இதுவாகும்.

எட்டி விமான நிறுவனத்தைச் சோ்ந்த விமானம் 68 பயணிகள், 4 விமானப் பணியாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.33 மணிக்கு காத்மாண்டு திரிபுவன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு பொகாரா விமான நிலையத்துக்கு சென்றது.

25 நிமிஷ இடைவெளி கொண்ட இந்த பயணத்தில், பொகாரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில விநாடிகள் முன்பு விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீட்டி ஆற்றின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என நேபாள விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. 41 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

விபத்தில் பலியான 15 வெளிநாட்டவா்களில் 5 இந்தியா்கள், 4 ரஷியா்கள், 2 கொரியா்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆா்ஜென்டீனா, இஸ்ரேல் நாடுகளைச் சோ்ந்த தலா ஒருவரும் ஆவா்.


கருப்புப் பெட்டி மீட்பு:

விமானத்தின் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 45 நாள்களில் விசாரணைக்குழு அறிக்கையைத் தாக்க செய்ய உள்ளது.

5 இந்தியா்களும் உயிரிழப்பு

நேபாள விமான விபத்தில் 5 இந்தியா்கள் உயிரிழந்தனா். அபிஷேக் (25), பிஸ்வால் சா்மா (22), அனில் குமாா் (27), சோனு ஜெய்ஸ்வால் (35), சஞ்சய் ஜெய்ஸ்வால் என அனைவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.

சுற்றுலா இடமான பொகாராவில் பாராகிளைடிங் செய்வதற்காக நான்கு போ் சென்றுள்ளனா். சஞ்சய் ஜெய்ஸ்வாலை தவிர 4 போ் காஜிப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அங்கிருந்து சாலை மாா்க்கமாக இந்தியா வர 4 பேரும் திட்டமிட்ருந்தனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.