/

வளம் அளிக்கும் முருகன்

செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமணப் பேறு, குழந்தைப் பேறு பெறவும் கண்கண்ட தலமாக இது விளங்குகிறது.

News image
Updated On :24 மே 2024, 11:37 am

பனையபுரம் அதியமான்

நடுநாட்டில் உள்ள முருகன் கோயில்களில் முன்னிலையாகத் திகழ்வது மயிலம் முருகன் கோயிலாகும். இதற்கு அடுத்த நிலையில், பெருமை பெற்ற தனிக் கோயிலாகத் திகழ்வது சிவசுப்பிரமணியர் கோயிலாகும். செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமணப் பேறு, குழந்தைப் பேறு பெறவும் கண்கண்ட தலமாக இது விளங்குகிறது.

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் வளவனூர் இருந்துள்ளதை ஜெகந்நாதீசுவரர் கோயில் கல்வெட்டு உறுதி செய்கிறது. சோழ மன்னர்களுக்கு வழங்கப்படும் "வளவன்' என்ற பட்டப் பெயரைப் பெற்று இவ்வூர் திகழ்ந்ததால் "வளவனூர்' என பெயர் பெற்றுள்ளது.

வளவனூர் பகுதி கோயில்கள், பிரபுடதேவராஜன் ஆட்சியிலும், குமாரக்குப்பம் பகுதி கோயில்கள், சம்புவராயர்கள் ஆட்சியிலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதன்பின், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ராஜா தேசிங்கு ஆட்சியின் எல்லையில் "வளவனூர்' இருந்துள்ளது. பாரதிதாசன் எழுதிய "தமிழச்சியின் கத்தி' என்ற காவியத்தில் வரும் கதாநாயகியின் சொந்த ஊராக வளவனூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் தென் தமிழகத்தில் "பாஞ்சாலம்' என்ற ஊரில் வாழ்ந்தோர் முருகனை மனமுவந்து வழிபட்டனர். ஒரு சமயம் பஞ்சம் ஏற்பட்டபோது, மக்கள் ஊரைக் காலி செய்துவிட்டு மூலவர் முருகனைத் தங்களுடன் எடுத்துக்கொண்டு, வடக்குத் தமிழகம் நோக்கிப் பயணித்தனர்.

ஒருநாள் இரவு ஓர் ஊரில் தங்கினர். மறுநாள் காலை புறப்படத் தயாரானபோது, முருகன் சிலையை தூக்க முடியாமல், அங்கேயே நிலைத்துவிட்டது. உடனே அந்தப் பகுதி நீர் வளம் நிறைந்து, பசுமை வெளியாகக் காட்சி தந்தது.

இந்தச் செய்தி ராஜாதேசிங்குவின் கவனத்துக்கு வரவே, நரையூரை ஆண்ட குறுநில மன்னன் வாயிலாக குடியேறிய மக்களுக்கு நிலமும், வீட்டுமனைகளும் மானியமாகத் தந்து, முருகனின் அடியார்களை கெüரவித்தான். இதன் நிகழ்வைப் போற்றும் வகையில் கோயில் முன்பு இன்றும் "மானிய விநாயகர்' எழுந்துள்ளார். அதுமுதல் அந்தப் பகுதி குமரனின் விருப்ப இடமாக விளங்கியதால், "குமாரபுரி' என்று பெயர் வைத்து முருகனுக்குச் சிறிய கோயிலை எழுப்பி வழிபடலாயினர். இந்தப் பகுதி வளம் கொழித்த பகுதியாகத் திகழ்ந்ததால், பல்வேறு ஊர்களில் இருந்தும் மக்கள் குமாரபுரிக்கு வந்து குடியேறினர்.

இறைவன் எளிய வடிவில் வள்ளி, தெய்வயானையுடன் அழகுறக் காட்சியளிக்கிறார். மயில் ஒய்யாரமாக, தெய்வயானையைப் பார்த்த வண்ணம் இருப்பதால், "தேவமயில்' என அழைக்கப்படுகிறது. இந்தச் சிலை கி.பி. 12}ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கோயில் தற்போது சிவசுப்பிரமணியர் கோயில் என அழைக்கப்படுகிறது. ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் விளங்கும் கோயிலின் வலதுபுறம் மானிய விநாயகர், இடதுபுறம் இடும்பன் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் அமர்ந்துள்ளனர். இடும்பன் உயரமாகவும், தனிச் சந்நிதியிலும் அமைந்துள்ளார்.

கோயிலுக்குள் நுழைந்ததும், கருவறையில் இடதுபுறம் கணபதி, வலதுபுறம் காசி விசுவநாதர், விசாலாட்சியும் அமைந்துள்ளனர். கருவறைச் சுற்றில் உற்சவமூர்த்திகளாக சோமாஸ்கந்தர், சண்முகசுவாமி, முத்துக்குமார சுவாமி, தண்டபாணி, கல்யாண கோலத்தில் முருகன், பரிவார தேவதைகளும் காட்சி தருகின்றனர்.

அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை, பாலசுப்பிரமணியர், நிருத கணபதி, அருணகிரிநாதர், பழனியாண்டவர், நக்கீரர், அகத்தியர், பிரம்மா, கருடாழ்வார், வீரவாகு, கண்ணன், அனுமன், தேசிகர், இடும்பன், சுமத்திர சண்டிகேஸ்வரர், நடராஜர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நவக்கிரகம் என அனைத்து சிலை வடிவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன. தனியே அங்காரகன் சந்நிதி அமைந்துள்ளது.

இத்தலத்து முருகனை வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள் குமாரபுரி சுப்பிரமணிய சுவாமி மீது கந்த நாயக மாலை பாடியுள்ளார். இது தவிர சுவாமிகள் இயற்றிய சண்முகத் திருப்புகழ், முருகக் கடவுள் மும்மணிக் கோவை ஆகிய நூல்களும் இத்தலத்து முருகனின் புகழ் பாடுகின்றன.

விழுப்புரம்} புதுச்சேரி நெடுஞ்சாலை வழித் தடத்தில், விழுப்புரத்துக்கு கிழக்கே 10 கி.மீ. , புதுச்சேரியிலிருந்து மேற்கே 30 கி.மீ. தொலைவில் வளவனூர் அமைந்துள்ளது. குமாரபுரியாகத் தோன்றிய இவ்வூர் இன்று வளவனூர் என்ற பேரூராட்சியில் உள்ளடங்கிய ஊராகத் திகழ்கின்றது. அன்றைய குமாரபுரி மருவி இன்று குமாரக் குப்பமாக அழைக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.