/

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

News image
Updated On :17 மே 2024, 11:35 am

பனையபுரம் அதியமான்

பிற்காலச் சோழர் காலத்தில், பனையூர் நாட்டின் ஊராக திருவாதிரைமங்கலம் இருந்தது. இங்கு அமைந்துள்ள தெய்வவடிவங்கள், சிற்பங்களின் கலைநயம் பிரமிப்பில் ஆழ்த்தும்.

திருவாதிரை விழா இந்தத் தலத்தில் சிறப்பாக நடைபெற்றுவந்த ஊராக இருந்ததால், இந்தப் பெயர் பெற்று விளங்கியுள்ளது. இந்தத் தலத்தை வைப்புத்தலமாக திருநாவுக்கரசரின் தேவாரத்திலும், தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் திருத்தலங்கள் வரலாற்றிலும் கூறப்பட்டுள்ளன.

காலவெள்ளத்தால் சிதிலமடைந்த இந்தக் கோயில் தற்போது புனரமைப்பில் சிமென்ட், செங்கற்களால் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் விளங்குகிறது. திருப்பணியின்போது, புவியில் இருந்து கிடைத்த நடராஜர், அம்பாள் ஐம்பொன் சிலைகளும் இத்தலத்தின் தொன்மையை உணர்த்துகின்றன. இந்த ஊரைச் சேர்ந்த சிவனடியார் ராதாகிருஷ்ணனின் முயற்சியால், 2016}இல் குடமுழுக்கு நடந்துள்ளது.

திருவாதிரை மங்கலம் எனும் அழகிய கிராமத்தின் ஈசான்ய மூலையில் பழைமையான ஆலயம் அமைந்துள்ளது. புனரமைப்பில் பழங்கற்கள் பயன்படுத்தப்படாததால், புதுக்கோயில் போல தோற்றம் அளிக்கிறது. என்றாலும் உள்ளே உள்ள மூலமூர்த்திகள் பிற்காலச் சோழர்காலத்தின் கலைநயத்தை உணர்த்துகின்றன.

எதிரே திருக்குளம், எளிய வளைவு கொண்ட நுழைவுவாயில், உள்ளே பலிபீடம், நந்திதேவர் வரவேற்கின்றன. உள்ளே மகாமண்டபம், இடதுபுறம் விநாயகர், வலதுபுறம் வள்ளி, தெய்வானை சமேத முருகர் தேவ மயிலைக் கொண்டு காட்சிதருகின்றனர். நடுநாயகமான இறைவன் சிவலோகநாதர் வட்ட வடிவ ஆவுடையாராக எளிய தோற்றத்தில், கிழக்கு முகமாய் காட்சி அருளுகின்றார். இறைவன் திருமேனி ஒளிவீசும் கோலத்தில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

சுவாமி சந்நிதியின் எதிரே, இடதுபுறம் தெற்கு நோக்கிய அன்னை சங்கரநாயகி சந்நிதி அமைந்துள்ளது. அன்னையும் ஐயனைப் போலவே, எளிய வடிவில் கலைநயம் கொண்ட திருமேனியராக காட்சி தருகிறாள். அன்னை நின்ற கோலத்தில் மேலிரு கரங்கள் ருத்ராட்சம், தாமரை கெண்டும் காட்சியளிக்கிறாள். கீழ் வலது கரம் அபய முத்திரையும், இடது கரம் இடுப்பில் கைவைத்த கோலத்திலும் எழிலாக காட்சிதருகிறது.

அன்னையின் திருமுடி எழிலான மகுடம் தாங்கி நிற்கிறது. கருவறைச்சுற்றில் தெற்கே தட்சிணாமுர்த்தி, வடக்கே புதிய துர்கை, எதிரில் பழைய சண்டிகேசுவரர் காட்சிதர, ஈசான்யத்தில் புதிய நவக் கிரக சந்நிதி அமைந்துள்ளது. கோயிலின் உட்புறத்தில் பல்வேறு வகையான பூச்செடிகள் பூத்துக்குலுங்குகின்றன.

இங்கு இருந்த 600 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் இரண்டில் ஒன்றில், இத்தலம் திருவாதிரைமங்கலம் என்பதையும், இறைவி சங்கரநாயகி என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இறைவன் சிவலோகநாதர் பங்குனி மாதத்தில் முதல் 20 நாள்கள் சூரிய உதயத்தில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் வழிபடுவது இத்தலத்தின் பெருமை.

செங்காலி மரமே தல மரமாகும். கோயில் எதிரேயுள்ள சிவகங்கைத் தீர்த்தம் அமைந்துள்ளது. திருமணத்தடை நீக்கும் தலமாகவும், தீராத நோய்களைத் தீர்க்கும் தலமாகவும் போற்றப்படுகிறது. இத்தலத்தின் அருகில் தேவாரத் தலங்களான திருவிற்குடி, திருப்பயத்தங்குடி ஆகிய திருத்தலங்களும் அமைந்துள்ளன.

திருவாரூர் } கங்களாஞ்சேரி - நாகூர் வழித்தடத்தில்,சூரனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில், அழகிய கிராமமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.