பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

மனதை மாற்றிய மாமறை

"குர்ஆனின் ஈர்ப்பு சக்தி நம்மை ஈர்த்து விடுகிறது. உறுதியாக குர்ஆன் தன்னைப் படித்தவர்களைத் தன்னில் ஆட்கொண்டு விடுகிறது'' என்று ஜெர்மன் மகா கவி கதே கூறியதை நிரூபிக்கும் நிகழ்ச்சி.அரேபியாவின் இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:48 am

மு. அ. அபுல் அமீன்

"குர்ஆனின் ஈர்ப்பு சக்தி நம்மை ஈர்த்து விடுகிறது. உறுதியாக குர்ஆன் தன்னைப் படித்தவர்களைத் தன்னில் ஆட்கொண்டு விடுகிறது'' என்று ஜெர்மன் மகா கவி கதே கூறியதை நிரூபிக்கும் நிகழ்ச்சி.

அரேபியாவின் இரண்டாம் கலீபா உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் முன்கோபியான முரட்டு காளை. உருட்டு விழிகளும் உருவிய வாளும் எதிரிகளைப் பதறி ஓட வைக்கும். அரபு நாட்டு மாமல்லர்கள் மோதும் "உக்காழ்' மேடைகளில் உமரிடம் உதைபட்டு வதைபட்டு வீழ்ந்தனர் மல்லர்கள். இஸ்லாம் இயம்பிய ஏகத்துவத்தின் எதிரியாய் விளங்கி ஏக இறைவன் ஒருவன் அவனின் திருநபி முஹம்மது (ஸல்) என்றாலே எரிமலையாய்க் குமுறினார் உமர்.

முஸ்லிமான அவரின் அடிமைப்பெண் பஸீனாவைப் பலமான உமரின் கைகளே களைத்து சோர்ந்திடும் வரை சவுக்காலடித்தவர் உமர். இஸ்லாமான அவரின் இன்னொரு அடிமைப்பெண் ஜ்ஸின்னீராவின் கண்கள் கலங்கி பார்வை பறிபோகுமளவு பரிதாபமாக இதயத்தில் இரக்கமின்றி அடித்தவர் உமர்.

முஹம்மது (ஸல்) அவர்களைக் கொன்று அவர்களின் தலையை கொண்டு வருபவருக்கு ஒரு நூறு செந்நிற ஒட்டகங்களைத் தருவதாக வாக்களித்த போக்கிரி பொல்லாத அபூஜஹிலின் உறுதிமொழியை ஏற்று உருவிய வாள் முஹம்மது (ஸல்) அவர்களின் தலையை கொய்யாது உறையுள் புகாது என்று சூளுரைத்து கொலை வெறியுடன் கோபம் கொப்பளிக்க புறப்பட்டார் 33 வயது முரடன் உமர்.

வழியில் சந்தித்த ஹழ்ரத் நுஜம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உமரின் குமுறும் கொலை வெறியைக் கண்டு, ""உமரே! உன்னுடன் பிறந்த உன் சகோதரி பாத்திமாவும் அவரின் கணவர் ஸஈதும் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுகின்றனர். உமது வீட்டைத் திருத்தாமல் நாட்டைத் திருத்த வந்த நபியைக் கொல்லப் போகிறீரே?'' என்று கேட்டார். உமர் உடல் குலுங்க வெடிக்கும் எரிமலையானார்.

அடுத்து எதிர்ப்பட்ட ஹழ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களும் உமரின் தங்கையும் மைத்துனரும் உய்ந்துணர்ந்து உயரிய முஹம்மது (ஸல்) அவர்களின் வழியில் வாழ்வதை உறுதிபடுத்தினார்.

உடன்பிறந்த தங்கை மங்கை நல்லாள் கரம் பிடித்த மைத்துனனின் குருதியை உருவிய வாள் முதலில் குடுக்கட்டும் என்று குதித்து ஓடினார் குமுறும் உமர். தாழிட்ட கதவுகளுக்கு வெளியே கேட்ட இனிமையாக ஓதிய குர்ஆனின் வசனங்கள் வசியப்படுத்தவில்லை உமரை. கசியா நெஞ்சம் மசியவில்லை. பசியோடு பாயும் புலியைப் போல பாய்ந்து தாக்கினார் மைத்துனரை. தடுக்க வந்த தங்கையின் நெற்றி பிளந்து கொட்டியது குருதி.

அடிமைப் பெண்களை அடித்தபொழுது உருகாத உமரின் உள்ளம் தூக்கி வளர்த்த தங்கையின் தலையிலிருந்து வழிந்த இரத்தம் கண்டும் கலங்காது ஓதிய வசனங்களைக் காட்டுமாறு கர்ஜித்தார் கடுமையின் மிடிமையில் மிடுக்காய் நின்ற உமர்.

அடியின் கொடும் வலியைத் தாங்கிக் கொண்டு தங்கை கூறினாள், ""சுத்தமின்றி தொடக் கூடாது சத்திய குர்ஆன் வசனங்களை. குளித்து தூய்மையாக வந்தால் தொடலாம்'' நீராடி தூய்மையாய் வந்து வாய்மையான குர்ஆன் வசனங்களை ஓதினார் உமர்.

""தாஹா (நபியே) அஞ்சக் கூடியவர்களுக்கு நல்லுபதேசமாக அல்லாது நீர் துன்பப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உம்மிடம் உரைக்கவில்லை'' (அத்தியாயம் 20; 1 முதல் 3 வரை வசனங்கள்)

உயர்ந்த வானங்களையும் பூமியையும் படைத்தவன் அருளியது. அர்ஷின் மீது ஆட்சியை நிலை நாட்டிய ரஹ்மானுக்குச் சொந்தமானவையே, வானங்களிலும் பூமியிலிருப்பவையும் இவற்றுக்கு இடையிலிருப்பவையும் பூமியில் புதைந்து கிடப்பனவும் (நபியே) நீர் மெதுவாக அல்லது உரக்க கூறினும் இரண்டும் அவனுக்குச் சமம். ஏனெனில் இரகசியத்தையும் இன்னும் மறைவாக மனதில் உள்ளதையும் அறிகிறவன் அல்லாஹ். அவனுக்கு அழகிய பெயர்கள் உண்டு (அத்தியாயம் 20 வசனங்கள் 4 முதல் 8 வரை)

எட்டாம் வசனம் எழுப்பிய உணர்வுகள் ஏற்படுத்திய நடுக்கத்தால் உமர் (ரலி) அவர்களின் கைகளிலிருந்த ஏடுகள் நழுவின. அழுத்தி பிடித்த உமர் அடுத்த சுவடியில் தொடுத்த வசனங்களை தொடர்ந்து ஓதினார்.

""வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்கின்றன. அவனே அனைத்தையும் மிகைத்தோன்; ஞானம் உடையவன். வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே. அவனே உயிர்ப்பிக்கிறான்; மரிக்கச் செய்கிறான். அவன் அனைத்திலும் ஆற்றல் மிக்குடையவன். ஆதியும் அவனே. அந்தமும் அவனே. வெளிப்படையானவன். மறைவானவன்.

சகலமும் நன்கறிந்தவன். அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் தன் ஆட்சியை நிலை நாட்டினான். பூமியில் ஊடுருவிச் செல்வதையும் வித்துக்கள் விதைக்கப்படுவதையும் முளைத்து வெளிப்படுவதையும் வானிலிருந்து இறங்குவதையும் வானை நோக்கி நிலத்திலிருந்து ஏறுவதையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடனிருப்பான். நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறான். வானங்கள் பூமிக்குரிய ஆட்சியாளன். அல்லாஹ்விடமே அனைத்து செயல்களும் கொண்டு வரப்படும். அவனே இரவைப் பகலில் நுழையச் செய்கிறான். இதயங்களிலுள்ள இரகசியங்களையும் அவன் அறிவான். ஆகவே மனிதர்களே அல்லாஹ்வையும் அவன் தூதரையும் விசுவாசியுங்கள். (அத்தியாயம் 57 வசனங்கள் 1 முதல் 7 வரை)

உணர்ச்சி பிழம்பான உமர் (ரலி) அவர்கள், ""அல்லாஹ் ஒருவன். அவனின் திருத்தூதர் முஹம்மது (ஸல்)'' என்று உரக்க கூவினார்.

கொலை வாளினை ஏந்தி குறைஷியர் முன்னே முஹம்மது (ஸல்) அவர்களின் தலையை கொய்து கொண்டு வருவேன் என்று கொக்கரித்த கொடுஞ்சிங்கம் உமர் (ரலி) கொலை வெறி தாகம் தீர்ந்து மறை நெறி தாபத்தால் பாறை நெஞ்சம் பனியாய் உருக பார்வை தாழ, ஓரிறை கொள்கையை போதித்த தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் முன் நின்றார்.

வெறி கொண்டு சிவந்த கண்கள் நெறி கண்டு தெளிந்து ஒளி பெற்றன. பழி பாவத்திற்கு அஞ்சா பழுதான விழிகள் திறந்து வெளிச்சம் பார்த்து வெளிவாயும் மொழிந்தது உள்ளம் உணர்ந்த உண்மையை, ""அல்லாஹ் ஒருவன்; அவனின் திருத்தூதர் முஹம்மது (ஸல்)'' என்று.

உமர் (ரலி) அவர்களின் உள்ளத்தில் ஊடுருவி உண்மையை உணர்த்திய நன்மை பகரும் நற்குர்ஆனை நாமும் பொருளுணர்ந்து ஓதி அருளாளன் அல்லாஹ் அறிவுறுத்தியபடி, அண்ணல் நபிகள் வாழ்ந்து காட்டிய வழியில் வாழ்ந்து இம்மை மறுமை இரண்டிலும் இறைவனின் நிறைவான் பொருத்தத்தை நிலையாய் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.