/

எட்டுத் திக்கும்...

உலகில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், சம்பவங்கள், வியக்க வைக்கும் அதிசயங்கள் சில:

News image
Updated On :7 ஜூன் 2025, 6:45 pm

ராஜிராதா

உலகில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், சம்பவங்கள், வியக்க வைக்கும் அதிசயங்கள் சில:

தபால் பெட்டி மரம்: தென் ஆப்பிரிக்காவில் உள்ள துறைமுக நகரம் மாஷல் பே. இங்கு 1501-இல் வந்த போர்த்துகீசிய கப்பலில், கப்பற்படை தளபதி இருந்தார். கடும் புயல் அடித்து ஓய்ந்திருந்தது. அதனால் தன்னுடன் வந்த பல கப்பல்களை இழந்தார்.

இந்தத் துறைமுகம் வழியே பயணிக்கும் கப்பல்களுக்கு கிழக்கு கடல் பகுதியின் உயர்ந்த அலைகளையும் கடல்புயல் குறித்து எச்சரித்தும் கடிதம் எழுதி உயர் அதிகாரியின் முகவரியுடன் கடிதத்தை கடற்கரையை ஒட்டியிருந்த பால் மரத்தில் ஒரு பூட்ஸூக்குள் வைத்து கட்டித் தொங்க விட்டார்.

இந்த மரத்தின் அருகே ஒரு நன்னீர் சுனையுள்ளது. சுற்றுலா வருபவர்கள் அதிலிருந்து நீர் எடுத்து குடிப்பர். அப்போது ஒருவர் ஷூ தொங்குவதைப் பார்த்துவிட்டு எடுத்துப் பார்க்க அதில் கடிதம் இருப்பதைப் பார்த்து பிறகு அதனை பலர் பார்க்க, 1502-இல் அந்த கடிதம் உரியவரிடம் போய் சேர்ந்தே விட்டது. இதன் பின் இந்த மரம் அதிகாரபூர்வ தபால் பெட்டி மரமாகிவிட்டது.

இப்போது மரத்தின் அருகில் அதிகாரபூர்வ முகவரியுடன் ஒரு சிறிய தபால் நிலையம் மிகப் பெரிய பூட்ஸ் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் பெட்டி கல்லில் உள்ளது. இது சுற்றுலாத் தலமாகி விட்டது. தபால் நிலையத்தில் கடிதங்கள் எழுதிப் போட வசதியாக சிறப்பு தபால் உறைகள்,தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1963-இல் இந்த மரம் தென்னாப்பிரிக்காவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

வான் காட்சிகளை அறிய கோல் தீவு: ஸ்காட்லாந்தில் உள்ள ஹெப்ரிட்ஸியினுள் கோல் தீவு உள்ளது. இங்கு வெப்பம் அதிகம். இரவு வானம் மிக கறுப்பாக இருக்கும். தெரு விளக்குகளும் கிடையாது. இதனால் சுற்று வட்டாரங்களிலும் எங்கும் ஒளியின் சிதறலே கிடையாது. அலைகள் வெள்ளை மணல் கரைகளை மெதுவாக தட்டும்போது வானின் பால்வீதியும் நட்சத்திரங்களும் அதில் அழகாக காட்சியளிக்கும்.

Story image

இங்கு நடைபெறும் பெரிய வான்வெளி நிகழ்ச்சியான "காஸ்மோஸ்' மிக பிரபலமானது. தீவின் மிதமான 104 மீட்டர் உயரம் கொண்ட பென்ஹாக் உச்சிக்குச் சென்றால் தீவை சுற்றிப் பார்க்கலாம். இருட்டுக்குப் பிறகு தடையற்ற வானக் காட்சிகளை தரிசிக்கலாம். தீவில் மூன்று இடங்களில் டார்க் ஸ்கை டிஸ்கவரி தளங்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தீவுக்கு "ஓப்பன்' என்ற இடத்திலிருந்து படகில் சென்று பிறகு கொஞ்சம் நடந்து மலை ஏறி தீவின் பார்வை இடங்களை அடையலாம். பயணிக்க சிறந்த நேரம் செப்டம்பர் முதல் மார்ச் வரையாகும். மற்ற மாதங்களில் பகலில் வெளிச்சம்வு இரவு 9 மணி வரையும் கூட நீளும்.

பட்னி டாப்: காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கவனம் பட்னிடாப் பக்கம் திரும்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோடை வாசஸ்தலம்தான் பட்னிடாப். ரம்பான், உதம்பூர் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44-இல் உள்ளது. 2024 மீட்டர் உயரத்தில் உள்ளது. அருகில் சேனாப் நதி ஓடுகிறது. குளிர்காலத்தில் பனிப் பொழிவுகள், பனி சரிவுகள் ஏற்பட்டு பாதையையே மூடிவிடும். இந்த இடர்பாடுகளை உலகின் மிக நீளமான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப் பாதை மாற்றி அமைத்துவிட்டது. பட்னி டாப்புக்கு தெற்கேயுள்ள செனானி கிராமத்திலிருந்து 2 கி.மீ, தொலைவில் துவங்கி வடக்கேயுள்ள நஸ்ரி கிராமம் வரை இந்தச் சுரங்கப் பாதை பயணிக்கிறது.

ஸ்கைவீயூ பட்னி டாப் எனப்படும் இந்தியாவின் மிக உயரமான ரோப்வே இங்கு உள்ளது. இதனால் சங்கெட்-பட்னி டாப் இடையே 1.5 மணியாக இருந்த பயணம் 15 நிமிடங்களாக சுருங்கி விட்டது.இங்கு சாகச சுற்றுலாக்கள் அதிகரித்து விட்டன. இங்கிருந்து வைஷ்ணவி தேவி கோயில் 96 கி.மீ. தொலைவில் உள்ளது.

எல்பா தீவு: பிரெஞ்ச் பேரரசர் நெப்போலியன் பதவியை துறந்து, அவரே கேட்டு கொண்டதற்கிணங்க இந்தத் தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

நெப்போலியன் தங்கிய இல்லம் முலினி அரண்மனை. கோடைகால இல்லம் வில்லா சான் மார்ட்டினோ ஆகியவை இன்றும் இங்கு உள்ளன. நெப்போலியன் பெயரிலேயே ஒரு நீருற்று உள்ளது.இது கனிம நீர் கொண்டது. இந்த ஊரின் ஸ்பெஷல் ஆலிவ் தோப்புகள், திராட்சை தோட்டங்கள், நெத்திலி, சார்டின், டுனா மீன்களுக்கு மிக பிரபலம்.

தென் அட்லாண்டிக்கில் உள்ள செயிண்ட் ஹெலனா தீவு கூட்டங்களில் ஒன்று. புவியின் மிக ஒதுங்கிய பகுதி. இந்தத் தீவு 223 சதுர கி.மீ. பரப்பு கொண்டது. எல்பா தீவு படிகம் போன்ற தெளிவான கடலை கொண்டது. இயற்கை வண்ணங்கள், கனிமங்களுக்கு பெயர் பெற்ற இடம். இரும்புத்தாது கிடைத்ததால் இதனை அடைய நிறைய போட்டிகளும் நடந்தன.

365 கடற்கரைகள் கொண்ட குட்டி நாடு: கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கில் கரிபியன் கடலாலும் சூழப்பட்ட து. ஏராளமான தேசிய பூங்காக்கள் உள்ளன.

வெள்ளை மணல் கடற்கரைகள், படகு ஓட்டுவது பிரபலம். இங்கு 365 கடற்கரைகள் உள்ளன. உலகின் சில சிறந்த கடற்கரைகளை இங்கு காணலாம். டிக்கென்சன் வளைகுடா கடற்கரைகள் பெயர் பெற்றவை. நீச்சல், பல்வேறு நீர் விளையாட்டுகளுக்கு மிகவும் பிரபலம். ஆன்டிகுவா காரமான சாஸ்க்கு பிரபலம். தலைநகரம் செயிண்ட் ஜோன்ஸ். இங்கு குறிப்பிட்ட உயரத்திலிருந்து மழைக்காடுகளை ரசிக்கலாம்.ஷெர்லி ஹைட்ஸ் என்ற இடத்தில் சூரிய அஸ்தமனம் பார்ப்பதில் உலகிலேயே சிறந்த இடம்.

லடாக்கில் பனி சிறுத்தைகள்:

இமயமலையின் பகுதிகள், திபெத் பீடபூமியில் காணப்படும் பனிச்சிறுத்தைகளை "மர்மமான விலங்கு' என அழைப்பர்.

மிதமான காலநிலை, சிக்கலான நிலப்பரப்பு கொண்ட வளங்கள் நிறைந்த புல்வெளி பகுதிகளில் இவை வாழ்கின்றன. அதிக இரை, குறைந்த மனித நடமாட்டம் உள்ள பகுதிகளை இவைத் தேர்ந்தெடுத்துவாழ்கின்றன. இவை கூச்ச சுபாவம் கொண்டவை.

உலகில் இவற்றின் மொத்த எண்ணிக்கையே 10 ஆயிரம்தான். இந்தியாவும் இதன் பாதுகாப்பில் கவனம் செலுத்தியுள்ளது. லடாக்கில் அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது, 47,500 சதுர கி.மீட்டரில் 477பனி சிறுத்தைகள் வாழ்ந்து வருவது கணக்கிடப்பட்டது.

வாசனை திரவியங்களைத் தெளித்து பல கேமிராக்களை பொருத்தி காத்திருப்பர். வாசனைக்கே அவை வரும்போது, உடனே கேமிராக்கள் கிளிக் செய்யும். ஹெமிங் தேசிய பூங்கா, கார்கில், லே உள்ளிட்ட பகுதிகளிலும் பனிச் சிறுத்தைகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.