தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஒவ்வொரு கச்சேரியும் முதல் கச்சேரி

'ஒவ்வொரு கச்சேரியும் எனக்கு முதல் கச்சேரி'' என்கிறார் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்.

News image

தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் - M.Palaniappan

Updated On :4 ஜனவரி 2025, 6:30 pm

'ஒவ்வொரு கச்சேரியும் எனக்கு முதல் கச்சேரி'' என்கிறார் தவில் வித்வான் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்.

திருவாரூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஹரித்வாரமங்கலத்தில் பிறந்து, கர்நாடக இசையுலகில் தவில் கலைஞராகப் பிரகாசிக்கும் அவர் இந்த ஆண்டு இசை விழா சீசனில், பாரத் கலாசாரின் "ஞானகலா பாரதி' விருதைப் பெற்றிருக்கிறார். எண்பது வயதை நெருங்கியும் கச்சேரிகளை நடத்திக் கொண்டிருக்கும் அவரிடம் பேசியபோது;

'எங்கள் கிராமம் ஒரு குக்கிராமம். ஒருபக்கம் வெண்ணாறு. இன்னொரு பக்கம் வெட்டாறு. ஆறுகளைக் கடக்க பாலமோ, சாலைகளோ கிடையாது. அந்தக் காலத்தில் ஒரு பஸ்ஸை பார்க்க வேண்டும் என்றால் கூட பத்து கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

எனது அப்பா குமாரவேல் ஹரித்வாரமங்கலத்தில் உள்ள பாதாளேசுவரை கோயிலின் ஆஸ்தான தவில் கலைஞர். "தவில் கற்றுவிட்டு, கிராமக் கோயிலில் நீயும் தவில் வாசிக்கணுமா? வேண்டாம்' என்று சொல்லிவிட்டார் எனது அப்பா. ஆனாலும் எனக்கு தவில் மீது ஒரு ஈர்ப்பு. என் அப்பாவிடம் தவில் கற்கச் சொல்லி, கேட்கத் தைரியம் இல்லாததால், அம்மாவிடம் சொன்னேன். சரியான தருணத்தில், என் அப்பாவிடம் சொல்லி, சம்மதம் பெற்றார் அம்மா.

எனக்கு எட்டு, வயதிருக்கும்போது, திருச்சேரையில் தவில் வித்வான் முத்துக்குமாரசாமி பிள்ளையிடம் தவில் கற்கச் சேர்த்துவிட, என் அப்பாவே அழைத்துகொண்டு போன நாள் என் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம்.

எனது பத்து வயதில் புரட்டாசி நவராத்திரி கச்கேரிக்கு வாசித்தபோது, என்னையும் உடன் அமரவைத்து எனது குருநாதர் வாசிக்கச் சொல்லி என் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்று நான் மகிழ்ச்சியில் திளைத்தது ஆயுசுக்கும் மறக்காது.

முருகன் கோயிலுக்குச் சென்று வணங்கும்போது, நான் என்னையே மறந்துவிடுவேன். எந்த ஊரில் சுவாமியைக் கும்பிட்டாலும், எனக்கு எங்கள் ஊர் முருகன் முன்னால் நிற்பது போலவே உணர்வேன். "நான் நல்லா தவில் வாசிக்கணும். பெயருரும் புகழும் அடையணும்' என்று வேண்டுவேன்.

தனிமையில் உட்கர்ந்து, புகழ் பெற்ற தவில் கலைஞரானதும் எனது பெயரை "பழனிவேல்' என்று போட்டுக் கொள்வதா? "ஏ.கே. பழனிவேல்' என்று போட்டுக் கொள்வதா?

ஊர் பெயரையும் சேர்த்து "ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல்' என்று பலமுறை யோசித்தது உண்டு.

பூக்களும், முள்களும் கலந்த நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது, தவில் மீது ஒருவித பக்தியே ஏற்படுகிறது. என் திறமையை அங்கீகரிக்கும் வகையில் எனக்கு நிறைய விருதுகள் கொடுத்திருப்பதில் மகிழ்ச்சி. இன்று நமக்கு கிடைத்திருக்கும் பெருமைக்கெல்லாம் காரணம் இந்த தவில் என்பதால், அதனை வணங்கத் தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகளாக, எத்தனையோ கச்சேரிகள் வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஒவ்வொரு கச்சேரியையும் என்னுடைய முதல் கச்சேரி போலவே நான் நினைத்து நன்றாக வாசிக்க வேண்டும் என்றே நினைப்பேன்.

"பத்மஸ்ரீ' விருது கிடைத்ததும், அதுவும் அப்துல் கலாமிடம் வாங்கியதை நான் மிகவும் பெருமையாக நினைக்கிறேன். அந்த விருதை வாங்க, தில்லிக்கு நான் சென்றபோது, விழாவுக்கு முந்தைய தினம் தில்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவும், சுப்புடு ஐயாவின் வாழ்த்தும் மறக்க முடியாதவை'' என்கிறார் ஹரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.