பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பறக்கும் பாவைகள்!

கழனிக்காட்டில் நின்றபடி விமானங்களைப் பார்த்து அதில் பயணிக்கும் கண்ணுக்குத் தெரியாத பயணிகளுக்கு டாடா காட்டிக் கொண்டிருக்கும் கிராமத்துச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். விமானங்களை அருகில் பார்த்துவிட்

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:39 pm

தி. இன்பராஜ்

ழனிக்காட்டில் நின்றபடி விமானங்களைப் பார்த்து அதில் பயணிக்கும் கண்ணுக்குத் தெரியாத பயணிகளுக்கு டாடா காட்டிக் கொண்டிருக்கும் கிராமத்துச் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். விமானங்களை அருகில் பார்த்துவிட்டாலே ஆச்சர்யத்தில் துள்ளிக் குதிக்கும் அவர்களுக்கு விமானத்தில் பணியாற்றவே வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனம்.

கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்தச் சிறப்புப் பட்டயப் பயிற்சி வகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பயிற்சி முடித்து சான்றிதழ்களைப் பெற்ற கையோடு 55 பேர் வேலையிலும் சேர்ந்துள்ளனர்.

இந்தப் பயிற்சி குறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கோ. பார்த்தசாரதியிடம் பேசினோம்.

""கோவையைச் சேர்ந்த கெவின் ஏர் க்ரூ அகாதெமியுடன் இணைந்து, கடந்த கல்வியாண்டில் (2009-10) தொடங்கப்பட்ட இந்தச் சிறப்பு பட்டயப் பயிற்சியில் 29 ஆண்கள் உள்பட 65 பேர் சேர்ந்தனர். இவர்களில், 20 பேர் கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். விமானப் பணிப்பெண் மற்றும் பயண மேலாண்மை குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடியும் தருவாயிலேயே 55 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றனர். பயிற்சியின் முடிவில் நடத்தப்பட்ட தேர்வில் முதலிடத்தை உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த எஸ். விஜய ரோகிணியும், இரண்டாமிடத்தை கோவையைச் சேர்ந்த மாணவர் பி.எஸ். அபிலாஷும், மூன்றாமிடத்தை உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த கே.எம். ரோகிதாவும், ஏ. நிவேதாவும் பெற்றனர்.

தொடர்ந்து, 2010-11 ஆம் கல்வியாண்டில் 120 பேரும், புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள முதுகலைப் பட்டயப் பிரிவில் 30 பேரும் சேர்ந்துள்ளனர்.

கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்தப் பட்டயப் பயிற்சி மிகவும் பயனுள்ளது. பிளஸ் 2 முடித்துவிட்டு ஓராண்டு பயிற்சிக்குப் பிறகு வேலை உறுதி என்பதால், இந்தப் பயிற்சியைப் பலர் நாடி வரத் தொடங்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் சேர பெரிய நிபந்தனைகள் கிடையாது. 17 வயது முதல் 23 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு 5.5 அடியும், பெண்களுக்கு 5.1 அடியும் உயரம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆங்கிலம், ஹிந்தி போன்ற வேற்று மொழிகள் தெரிந்திருந்தால் நல்லது. தமிழ் தவிர வேறு மொழிகள் தெரியாவிட்டாலும், ஓராண்டுப் பயிற்சியின்போது ஆங்கிலம் பேசுவதற்குத் தனிப் பயிற்சி கொடுக்கப்படும்.

பயிற்சிகள் அனைத்தும் கோவையில் வழங்கப்படும். பாடத்திட்டங்களுடன் கூடுதலாக சரளமாக ஆங்கிலம் பேசுவது, யோகா, உடல் தகுதியை மேம்படுத்துதல், தன்னை எப்போதும் அழகாக வைத்திருத்தல் போன்ற பயிற்சிகளையும் கொடுக்கிறோம். பயிற்சியின் முடிவில் ஒருமுறை வெளிநாட்டுக்கு விமானத்தில் பயணம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்தச் சிறப்பு பட்டயப் பயிற்சிக்காக ஆண்டுக்கு ரூ. 95,000 கட்டணம் வசூலிக்கப்படும். கல்விக் கடன் பெற விரும்புவோருக்கு நாங்களே வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக பல்கலைக்கழகச் சான்றிதழுடன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மட்டுமே இந்த பட்டயப் பயிற்சி உள்ளது. தனியாரிடம் விமானப் பணிப்பெண் பயிற்சி பெற வேண்டுமானால் ரூ. 2 லட்சம் வரை செலவிட வேண்டும்.

கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பட்டயப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மேல்நிலைப் பள்ளிகளுக்கு இந்தப் பயிற்சி குறித்த விவரங்களை அனுப்பியுள்ளோம்.

தற்போது பயிற்சி முடித்துச் சென்றுள்ள 65 பேரில் எவரேனும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டப்படிப்பு படிக்க முன்வந்தால் அவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 33 சதம் குறைக்கப்படும். முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க விரும்பினால் 25 சத கட்டணம் குறைத்துக் கொள்ளப்படும்'' என்றார்.

அப்புறம் என்ன? வானில் ஏறி விண்ணையும் சாடுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.