நல்ல காலம் பொறக்குது!
அரண்மனை வாயில் காப்பவன், ஒரு குடுகுடுப்பைக்காரனைக் கைது செய்து மன்னரிடம் அழைத்துக்கொண்டு வந்தான்.


அரண்மனை வாயில் காப்பவன், ஒரு குடுகுடுப்பைக்காரனைக் கைது செய்து மன்னரிடம் அழைத்துக்கொண்டு வந்தான்.
""மன்னா! இந்த குடுகுடுப்பைக்காரன் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு, தங்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தும், திட்டியும், தங்களுக்கு மோசமான எதிர்கால பலனும் சொல்லிக்கொண்டு இருந்தான். நிறுத்தச் சொல்லி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. மிரட்டியும் பார்த்தாகிவிட்டது! சற்றும் பயப்படவில்லை! கீழ்ப்படிய மறுக்கிறான். என்ன செய்வதென்று தெரியாமல் கைது செய்து தங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்''
மன்னர் சிரித்துக்கொண்டே குடுகுடுப்பைக்காரனை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அவனிடம், ""என்ன குடுகுடுப்பைக்காரரே...,காவலன் சொல்வது உண்மைதானா? மிகவும் அவதூறாக என்னைப் பேசியது உண்மையா? எப்பொழுதும் "நல்ல காலம் பொறக்குது...,நல்ல காலம் பொறக்குது...' என்று நல்வாக்கினையே கூறும் நீங்கள் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்னை? என்னைத் தூற்றிப் பேசியதற்கு என்ன காரணம்?''
குடுகுடுப்பைக்காரன் மன்னரை வணங்கினான். பிறகு மன்னனிடம், ""என்னை தயவு செய்து மன்னியுங்கள்......நான் கூறியது அவதூறுதான். தங்கள் ஆட்சியில் எவருக்கும் எந்தக் குறையும் இல்லை! மக்கள் அனைவரும் நலமாகவே உள்ளனர்! அவர்கள் செய்யும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது! அனைவரும் உடல்நலத்தோடும் உள்ளனர்! கல்வியும் சிறப்பாக போதிக்கப் படுகிறது! கல்விச்சாலையிலுள்ள மாணாக்கர்கள் அனைவரும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றனர்.''
""சரி வேறு என்ன குறை?''
""குறையே இல்லை மன்னா! வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் தூய்மையாகவும் சிறப்பாகவும் உள்ளது!.......தெய்வபக்திக்கும் பெரியோரிடம் மரியாதைக்கும் குறைவில்லை! எல்லோரும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கின்றனர்! அத்தனைபேரும் செல்வச் செழிப்புடனும், ஆரோக்கியத்துடனும்,கல்வி அறிவுடனும் இருக்கின்றனர்!''
""பின் ஏன் என்னைத் தூற்றினீர்கள்?''
""இப்படி எல்லாம் சரியாக இருக்கும்போது, நான் வீடு வீடாகச் சென்று "நல்ல காலம் பொறக்குது...,நல்ல காலம் பொறக்குது'ன்னு போய்ச் சொன்னால் என்னை அனைவரும் கேலியாகவும், பரிகாசமாகவும் பார்க்கின்றனர்... நல் வாக்கு சொல்வதைத் தவிர வேறு இதுவரை செய்ததில்லை! தற்போது எதுவும் வேலை இன்றி முடங்கிப் போய் இருக்கிறோம்! தங்கள் சிறப்பான ஆட்சியினால் நாங்கள் பிழைப்பின்றி இருக்கிறோம்''
""நீ என்னதான் சொல்ல வருகிறாய்?''
""இதையெல்லாம் நேரில் தங்களிடம் முறையிட வேண்டும் என்று பலமுறை முயற்சித்தும் நடக்கவில்லை. எனவேதான் அரண்மனை முன்பு தங்களைப் பற்றி அவதூறு பேசும்படி ஆகிவிட்டது! மன்னித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு பிழைப்பிற்கு ஏதாவது வழி செய்ய வேண்டுகிறேன்'' என்று பெருமூச்சுடன் குடுகுடுப்பைக்காரன் கூறினான்.
குடுகுடுப்பைக்காரனின் சாமர்த்தியத்தைப் பாராட்டி, அவர்களின் மாற்றுத் தொழிலுக்கான ஏற்பாட்டை செய்வதாக உறுதி அளித்தார் மன்னர்! மேலும் தற்காலிகமாக ஒரு நிவாரணத்தொகையும் அளித்து குடுகுடுப்பைக்காரனை சந்தோஷமாக வழி அனுப்பினார் மன்னர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...