மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எஸ்.எம். சுப்பையா நாயுடு - நான் சந்தித்த பிரபலங்கள் - 45

எஸ்.எம். சுப்பையா நாயுடு பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

News image

எஸ்.எம். சுப்பையா நாயுடு

Updated On :14 பிப்ரவரி 2026, 10:36 pm

தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக ஆரம்பகாலத்தில் இருந்த எஸ்.எம். சுப்பையா நாயுடு 1914, மார்ச் 15- இல் பிறந்தார். பக்ஷிராஜா ஸ்டூடியோ எடுத்த படங்களுக்கெல்லாம் பக்கப் பலமாக இருந்தார். 'மலைக்கள்ளன்' படத்தில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைப் பாடிய திருச்சி லோகநாதன் மிகவும் பிரபலமாக இருந்தபோது, கேட்ட சம்பளம் தராதலால் அவர் சிபாரிசில் டி.எம். சௌந்தரராஜன் என்ற பின்னணிப் பாடகரைப் பிரபலமாக்கினார்.

சிறு வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்த 'ஸ்ரீமுருகன்' படம் 1946 முதல் 'நாடோடி மன்னன்', 'திருடாதே' என்று எத்தனையோ படங்களில் முத்தான பாடல்களுக்கு இசையமைத்தார். 'மர்ம யோகி' என்ற படம்தான் தமிழ் நாட்டின் முதல் 'ஏ' சான்றிதழ் படம்.

இவரிடம் வேலை பார்த்த ஒருவர் இவரின் ஆர்மோனியத்தைத் துடைத்த போது அதை வாசித்து பாடியதைக் கேட்டு அவர் திறமையைக் கண்டுபிடித்து வாழ்த்தினார். அந்த உதவியாளர் வேறு யாருமில்லை... தமிழ் இசை உலகை இரண்டு தலைமுறைகளாகக் கட்டிப் போட்ட எம். எஸ். விஸ்வநாதன்.

அடுத்தது நம் திரை உலகின் பாடல்களை பட்டி தொட்டி எல்லாம் சேர்த்த கவியரசர் கண்ணதாசனின் முதல் பாடல் 'கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே...' என்ற தன்னம்பிக்கை வரிகளை 1949-இல் 'கன்னியின் காதலி' என்ற படத்தில் பாட வைத்தார்.

'கொஞ்சும் சலங்கை' படத்தில் 'சிங்காரவேலனே...' என்ற பாடலை மறக்க முடியுமா? இந்தப் படம் முதன் முதலாக போலந்து நாட்டில் திரையிடப்பட்ட படம். இப்படத்தின் உரிமையை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று வாங்கி 22 மொழிகளில் சப் டைட்டில் போட்டு உலகம் முழுவதும் வெளியிட்டது.

1964-இல், இவரை நான் ராயப்பேட்டையில் உள்ள கூரை வேய்ந்திருந்த மொட்டை மாடியில் சந்தித்தேன். பனியன், கைலியுடன் இருந்தார். என்னை நான் அறிமுகம் செய்து கொண்டேன். என் கவிதைகள் வெளியான பத்திரிகைகளையும், கவியரசர் கண்ணதாசன் தந்த பாராட்டுச் சான்றிதழையும் காட்டினேன். திரைப்படப் பாடல்களுக்காக எழுதிக் கொண்டு போனதைப் படிக்கச் சொன்னார். மனம் நடுங்கியதை உணர்ந்தேன். சத்தமாகப் படித்தேன்.

ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பி

அப்புறம் நீ யார் அவன் யாரோ

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - உயிர்

போன பின் உனக்குத் துணையாரோ

அடுத்தது ஒன்றைப் படித்தேன்.

பத்துப் பிள்ளை பெத்தா இந்த

உத்தமத்தாயி வீட்டுல

பத்தும் ஓடிப் போச்சு அம்மா

பெத்தவ இப்போ ரோட்டுல

நான் படித்தபோது அவர் ரசிப்பது தெரிந்தது. மேலும் ஒன்றைப் படித்தேன்.

காலம் எங்கே போகும் - அது

கருணைத் தீபம் காட்டும்

வாழ்க்கை எங்கே போகும் - என்

வாசற்கதவைத் தட்டும்

அவர் கை தட்டினார். எம். ஜி. ஆரிடம் சிபாரிசு செய்வதாகச் சொன்னார். ஆனால், காலம் என்னை சென்னையில் இருக்கும் வசதியில்லாமல் ஊருக்கு விரட்டியது.

மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராயப்பேட்டை பாலாஜி நகரில் பாலன் பிக்சர்ஸ் 'நாம் மூவர்' படம் எடுத்த போது, இயக்குநர் மகேந்திரன் அந்தப் படத்துக்குக் கதை எழுதிய காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்களானோம்.

அவர் சுப்பையா நாயுடுவிடம் எனக்குப் பாட்டு எழுத சிபாரிசு செய்தார். உடனே நாயுடு என்னைத் தெரியும் என்றும் நான் சந்தித்த விவரத்தைச் சொன்னார். ஆச்சரியப்பட்டேன். காரணம், இந்தத் திரையுலகில் தன்னை ஆளாக்கியவர்கள் கொஞ்சம் நிலை தாழ்ந்து விட்டாலே போதும், அவர்களைத் தங்களுக்குத் தெரியாது போலவும், பிரபலமாக இருப்பவர் ஒருவர் பெயரைச் சொல்லி, அவரால் தான் முன்னேறியதாகப் போலித் தம்பட்டம் அடிப்பார்கள்.

அப்படி இருக்க வாய்ப்புக் கேட்டு அவர் வாசல் தேடிப் போனவனைத் தெரியும் என்று சொன்னாரே... அதை இன்னும் நான் மறக்கவில்லை.

மேலும் அவர் 'தாழம்பூ' இயக்குநர் என். எஸ். ராமதாஸ் மூலமாக இசையமைப்பாளர் கே. வி. மகாதேவனிடமும் எம்.ஜி. ஆரிடமும் சிபாரிசு செய்யச் சொன்னார்.

இவரது இறுதிக் காலத்தில் இவரையும் இவரது மனைவியையும் எம்.எஸ். விஸ்வநாதன் தன் வீட்டில் வைத்து தாய், தகப்பனைப் போலப் பாராட்டினார். தினமும் ஆர்மோனியத்தை வாசித்த கைகள் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்ட நிலையில் 1979, மே 26-இல் இசைப்பதை மறந்தது. இவருக்கு எம். எஸ். விஸ்வநாதன் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.