/

உளவியல் ஆய்வில் 16 உண்மைகள்

ஒவ்வொரு நாடும் மொழி, கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட விஷயங்களில் மாறுபட்டிருப்பது இயல்பு.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 10:43 am

ஒவ்வொரு நாடும் மொழி, கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட விஷயங்களில் மாறுபட்டிருப்பது இயல்பு. இவை அனைத்தையும் தாண்டி, தனி மனிதன் ஒருவன் தனது வாழ்க்கையின் முக்கிய நோக்கத்தையும், அது எப்படித் தனக்கு முழு திருப்தியளிக்கிறது என்பதையும் அறிய விழைகிறான். இதுகுறித்த உண்மையை அதிசய புதிய உளவியல் ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளர்கள் தாங்கள் மேற்கொண்ட ஆய்வில், இருநூறு அமெரிக்கத் தன்னார்வலர்களைப் பங்கெடுக்க வைத்தனர். வாழ்க்கையில் அவர்கள் முக்கியமாகக் கருதும் ஏழு விஷயங்களையும், அது எப்படி வாழ்க்கையின் குறிக்கோளைத் திருப்திப்படுத்துகிறது என்பதையும் எழுதச் சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து இன்னும் இரண்டாயிரம் தரவுகளைப் பெற்று, பதினாறு அடிப்படை விஷயங்களை அவர்கள் பட்டியலிட்டனர். இவை:

தனி மனித சுயமுன்னேற்றம்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவனாக விளங்குவது.

குடும்பம்: குடும்பத்தைத் தாங்கி குடும்பத்தினரை மென்மேலும் உயரச் செய்வது.

உறவுகள்: நெருங்கிய தொடர்புகளை இனம் கண்டு அவர்களுடன் நெருக்கமான தொடர்பை உருவாக்கி உறவைப் பலப்படுத்துவது.

மதமும், ஆன்மிகமும்:

மதம், ஆன்மிகம் சம்பந்தமான நம்பிக்கைகளை நிர்ணயித்து அதற்குத் தகுந்தவாறு வாழ்வது.

சமூக அங்கீகரிப்பு:

அனைவராலும் மதிக்கப்பட்டு உயரிய அந்தஸ்தைப் பெறுவது.

சந்தோஷம்: எப்போதும் சந்தோஷமாக இருந்து வாழ்க்கையை நன்கு அனுபவித்து நலமுடன் இருப்பது.

சுய நிறைவு: தன்னையும் குடும்பத்தையும் பராமரிக்கும் அளவு செல்வ வளத்தை சுயமாக அடைவதோடு விருப்பம் போலச்செயல்படுவது.

பொருளாதார வளம்: பணக்காரனாக ஆகி,

அருமையானவற்றைச் சொந்தமாக்கிக் கொண்டு நினைத்ததை வாங்கும் வளத்தைப் பெறுவது.

உள்ளார்ந்த தரங்களை உணர்தல்: தான் யார் என்பதை உணர்ந்து, எதற்காக வாழ்கிறோம் என்பதை அறிந்து, சுயமாக நிர்ணயித்துக் கொண்ட தரங்களின் அடிப்படையில் வாழ்வது.

ஆக்கபூர்வமான தாக்கம்: உலகை இன்னும் அதிகமான நல்ல இடமாக ஆக்குவது.

உணர்வூக்கம் தருதல்: மற்றவர்களை ஊக்கப்படுத்தி தனக்கென ஒரு நன்மதிப்பைப் பெறுவதோடு, உலகின் மீது ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவது.

தொழிலில் திருப்தி: தனது தொழிலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்று திருப்தி அடைதல்.

விடாமுயற்சி: எதையும் மனம் தளர்ந்து விட்டு விடாமல் போராட்டங்களைத் தக்க விதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெறுவது.

உடல் நலம்: உடலை நன்கு பேணிப் பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வது.

உள்ளார்ந்த மன அமைதி: எதை மாற்ற முடியாதோ அதை ஏற்றுக்கொள்வதோடு, எது கிடைத்ததோ அதை திருப்தியுடன் ஏற்று உள்ளார்ந்த மன அமைதியுடன் வாழ்வது.

சேவை: வாழ்கின்ற சமூகத்துக்கும்நாட்டுக்கும் சேவை புரிவது.

இந்தப் பதினாறு அம்சங்களையும் இன்னும் ஒரு நூறு அமெரிக்கர்களுடன் விவாதித்து, பின்னர் ஜப்பான், இந்தியா, போலந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஆயிரம் பேரைத் தொடர்பு கொண்டது ஆய்வுக் குழு.

ஆச்சரியப்படும் விதமாக அனைத்து நாடுகளிலும் அனைத்துப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் சந்தோஷம், திருப்தி, விடாமுயற்சி, சேவை ஆகியவற்றுக்கு ஒரே முக்கியத்துவம் தருவதைக் குழு கண்டது. தன்னிடம் பணம் சேர்வதைவிட அந்தப் பணத்தால் பிறருக்கு உதவி செய்வதை அனைவரும் விரும்புகின்றனர். ஜப்பானியர்கள் தொழிலில் முனைப்புடன் விசுவாசமாக இருப்பதை விரும்புகின்றனர்.

குடும்பத்தைப் பற்றிப் பல்வேறு நாடுகளிலும் அழுத்தமான கருத்து பதிவாகியிருக்கிறது. குடும்பத்தை மையமாகக் கொண்டு வாழ்வின் குறிக்கோளை மனித இனம் அடைகிறதா என்பதை அறிய ஆய்வுக் குழு விரும்புவதால் அதன் அடிப்படையில் மேலும் ஆய்வை நடத்த குழு தீர்மானித்துள்ளது.

குடும்ப மேன்மை, சமுதாய சேவை ஆகியவையே ஒருவனுக்கு வாழ்வின் நோக்கத்தை உறுதிப்படுத்தி,

அவனுக்குத் திருப்தி அளிக்கும் என்பதுதான் உண்மை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.