/

தடைகளைத் தகர்த்தெறி..!

'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் உத்தரகண்ட், இயற்கை அழகு கொஞ்சும் இமயமலையின் மடியில் அமைந்துள்ளது.

News image
கடவுளின் தேசம்
Updated On :16 நவம்பர் 2024, 6:30 pm

ராஜிராதா

'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் உத்தரகண்ட், இயற்கை அழகு கொஞ்சும் இமயமலையின் மடியில் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் தரிசு நிலங்களாக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது பழச்சோலைகளாகவும், விளைச்சல் தரும் வயல்களாகவும் மாறிவருகின்றன.

இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேய் கிராமங்கள் உள்ளன. 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, பேய் கிராமங்கள் 1,048 என இருந்தது. அது என்ன பேய் கிராமம் ? ஊரையே காலி செய்து கொண்டு வாழ்வாதாரம் கருதி சென்று விடுவதுதான். ஆக, இந்தக் கிராமங்களின் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. இந்த நிலங்களை பழச்சோலையாக மாற்றியதற்கு வித்திட்டவர் விமல் நெளடியல்.

அவர் கூறியது:

'2009-இல் நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, ரிசார்ட்ஸ் , ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 'பேஸ்டிரி செஃப்' -ஆகப் பணிபுரிந்து வந்தேன். வெளிநாடுகளுக்கும் சென்றேன். இப்படி இருந்தநிலையில், கரோனா காலம் எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது.

நிறைய சேர்த்து வைத்திருந்த பணத்துடன் என்னுடைய சொந்த கிராமமான உகியாத்துக்கு வந்தேன். எனது மூதாதையருக்கு சொந்தமான நிலத்தை சீராக்கித் துடிப்பான சோலையாக மாற்றினேன்.

கிவி, பேரிக்காய், பீச், பிளம், ஆப்ரிகாட், சில மருத்துவத் தாவரங்களைப் பயிரிட்டேன். மேலும், ஆயிரம் ஆப்பிள் மரங்களையும் பல வகைகளுடன் நட்டேன். பழத்தோட்டங்களோடு காப்சிகம், சுரைக்காய், முட்டைகோஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட பருவகால பயிர்களையும் பயிரிட்டேன். இவற்றில் உற்பத்தியான காய்களையும், கனிகளையும் உள்ளுர் சந்தைகளில் விற்றபோது, நான் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைத்தது.

நான் மேற்கொண்ட பணியைப் பார்த்த, அருகில் இருக்கும் கிராம மக்களும் தங்களுடைய மூதாதையர்களின் நிலத்தில் விவசாயப் பணிகளை ஆரம்பித்தனர். இதில், புயாசாரியைச் சேர்ந்த ஷஷிகாந்த் கவுர், மெளல்தாராவின் நரேந்திர மணி நெளடியல், புத்கோட்டைச் சேர்ந்த ஹரிஷ் கவுர் உள்ளிட்டோர் துணிந்து ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டனர்.

'பேய் கிராமங்கள்' என அழைக்கப்பட்டவை தற்போது கிராமப்புற வளர்ச்சிக்கு ஒரு முன் மாதிரியாக மாறி வருகின்றன. மலைப்பகுதிகள் ஒரு வரம்புக்கு உள்பட்டவை என்றும் அங்கு எதுவும் விளையாது என்றும் கூறப்பட்ட கூற்றுகள் தகர்த்தெறிந்துவிட்டன.

'உறக்கத்தில் நீங்கள் காண்பது கனவுகள் அல்ல; கனவுகள் நீங்கள் அவற்றை நினைவாக்கும் வரை தூங்க விடாது' என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது மனதில் கொண்டு, கனவைநனவாக்கினேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு தெஹ்ரி மாவட்ட நீதிபதி மங்கேஷ் கில்டியால் பெரிதும் வழிகாட்டினார். எனது அரிய பணிகளுக்காக, பல்வேறு அமைப்புகளிடம் இருந்து விருதுகளையும் பெற்றுள்ளேன்' என்கிறார் விமல் நௌடியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.