சினிமா மூலமும் கொண்டு செல்வேன்!
கங்கனா ரணாவத்தின் தாகத் படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது.


கங்கனா ரணாவத்தின் "தாகத்' படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. படத்தின் சாட்டிலைட், ஓடிடி உரிமையைப் பெறுவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்கிற தகவல் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
"தாகத்' படம் மே 20-ஆம் தேதி திரையங்குகளில் வெளியானது. பாலிவுட் குயின் கங்கனா ரணாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைக்காததால், பல திரையரங்குகளில் படம் திரையிடுவது ரத்தானது.
"பொதுவாகவே படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே அதன் சாட்டிலைட் , ஓடிடி உரிமைகளை விற்றுவிடுவர். இந்தப் படத்தைப் பொருத்தவரை படத்தின் வெளியீட்டுக்குப் பின் நல்ல தொகைக்கு விற்கலாம் எனத் தயாரிப்பாளார்கள் காத்திருந்தனர். ஆனால் படம் மோசமான தோல்வியைச் சந்தித்தால் எந்த நிறுவனமும் இதன் உரிமையைப் பெற முன்வரவில்லை' எனத் தெரிவிக்கிறார்கள் பாலிவுட் வட்டாரத்தினர்.
"தாகத்' படத்தின் திரையரங்க விநியோகத்தை ஜீ 5 நிறுவனம் மேற்கொண்டது. இருப்பினும் ஓடிடி உரிமையை அவர்கள் பெறவில்லை. தயாரிப்பு தரப்பு அமேசான் பிரைம் நிறுவனத்துக்கு படத்தை விற்க முயற்சி செய்து வருகிறார்கள். இன்னும் சில நாள்களில் என்ன நிலவரம் என்பது தெரியும்' என்கிறார்கள். 80-90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் வெறும் ரூ.3 கோடி அளவுக்கு கூட வசூல் எடுக்கவில்லை. தயாரிப்பாளர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் கவலை தெரிவிக்கிறது பாலிவுட்.
இதற்கு பின்னால் கங்கனாவின் தொடர் சர்ச்சை கருத்துகளும் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். இந்தப் படம் தொடங்கிய நேரத்தில் இருந்து அவர் வைத்த கருத்துகளுக்கு தொடர் சர்ச்சைகள் எழுந்தன. ஒருபுறம் எதிர்ப்பு, மறுபுறம் ஆதரவு எனத் தொடர்ந்து பயணித்தார் கங்கனா. அதன் பாதிப்புதான் இந்தப் படத்தின் தோல்வியா... என்ற விவாதமும் பாலிவுட்டில் தொடங்கியுள்ளது.
"தாகத்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது வழிபாட்டுக்காக, படக்குழுவினருடன் நடிகை கங்கனா ரணாவத் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது வழிபாடு முடித்துவிட்டு, வெளியே வந்த கங்கனா ரணாவத்திடம், கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கங்கனா, ""மதுராவின் ஒவ்வொரு துகளிலும் பகவான் கிருஷ்ணரும், அயோத்தியின் ஒவ்வொரு துகளிலும் பகவான் ராமரும் எப்படி இருக்கிறார்களோ, அதேபோல காசியின் ஒவ்வொரு துகளிலும் சிவ பெருமான் இருக்கிறார். அவருக்கென தனியாக ஓர் அமைப்பு தேவையில்லை. ஒவ்வொரு துகளிலுமே அவர் வசிக்கிறார்'' எனக் கூறினார். இதற்கு பெரும் சர்ச்சைகள் கிளம்பின.
இதனால் சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சமூக வலைதளங்களில் கங்கனா வெளியிடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக சுட்டுரை நிர்வாகம் பல முறை கங்கனா மீது நடவடிக்கை எடுத்து சில மணி நேரம் கணக்கை முடக்கியது. மும்பை போலீஸார் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்தபோது சிவசேனா கங்கனாவைக் கடுமையாகக் கண்டித்தது. இதனால் கங்கனா தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்த பிறகுதான் மும்பைக்கு வந்தார். அடிக்கடி மகாராஷ்டிராவிலுள்ள சிவசேனா கூட்டணி அரசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். தற்போது மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை தொடர்பாக கங்கனா சுட்டுரையில் வெளியிட்ட பதிவுக்காக அவரின் கணக்கை சுட்டுரை நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியுள்ளது சுட்டுரை நிர்வாகம்.
கங்கனா மேற்கு வங்கத் தேர்தல் தொடர்பாக சில விடியோ பதிவுகளைப் பதிவிட்டதோடு, பிரதமர் நரேந்திர மோடி, மம்தா பானர்ஜியை அடக்க வேண்டும் என்றும், மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், பாஜக வெற்றி பெற்ற அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் எந்தவித வன்முறையும் நடக்கவில்லை; ஆனால் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு நூற்றுக்கணக்கானோர் கொலை செய்யப்பட்டு மேற்கு வங்கம் பற்றி எரிகிறது என்றும் தொடர்ச்சியாகப் பதிவுகளை வெளியிட்டிருந்தார். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தியையும் இதில் இழுத்திருந்தார். இதையடுத்து கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுட்டுரையில் ஏராளமானோர் பதிவிட்டிருந்தனர். இந்தப் பதிவுகளைத் தொடர்ந்தே சுட்டுரை நிர்வாகம் கங்கனாவின் கணக்கை நிரந்தரமாக முடக்கியது.
சுட்டுரை முடக்கம், சிவசேனா எதிர்ப்பாளர் என அவரைத் தொடர்ந்து சுழலும் சர்ச்சைகள் ஒரு புறம்... இன்னொரு புறம் "தாகத்' படத்தின் மிகப் பெரிய தோல்வி... என சுற்றிச் சுழல்கிறார் கங்கனா. இதற்கிடையில் அவர் அளித்துள்ள பேட்டியில்...:
""சுட்டுரை நிர்வாகம் எனது கணக்கை முடக்கியதன் மூலம் அவர்கள் அமெரிக்கர்கள் என்ற என் கருத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் மற்றவர்களை அடிமைப்படுத்த உரிமை உண்டு என்று நினைக்கின்றனர். அவர்கள் நாம் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல விரும்புகின்றனர். எனது கருத்தை வேறு தளங்கள் மூலமும், சினிமா மூலமும் கொண்டு செல்வேன். நாட்டில் மக்கள் எங்கு துன்புறுத்தப்படுகிறார்களோ அவர்களுக்காக எனது இதயம் துடிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். கங்கனா சுட்டுரையில் பதிவிட்டிருந்த கருத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார். ஆனால் அதற்காக இன்ஸ்டாகிராமில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கங்கனாவின் சகோதரி ரங்கோலியின் சுட்டுரை கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...