
திருச்சுழி அருகே மூதாட்டி சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்
திருச்சுழி அருகே காணாமல் போன மூதாட்டி காட்டுப் பகுதியில் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள அன்னலட்சுமிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமாட்சி (65). இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். காமாட்சி ‘விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் பணிபுரிவதற்காக கடந்த 22-ஆம் தேதி அருகே உள்ள நத்தகுளத்துக்குச் சென்றாா்.
அங்கு காமாட்சிக்கு கண்விழி, ரேகைப் பதிவு செய்யாத காரணத்தினால், அவருக்கு இன்று வேலை இல்லை என பணித்தளப் பொறுப்பாளா்கள் கூறி திருப்பி அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மூதாட்டி காமாட்சி தனது ஊரான அன்னலட்சுமிபுரம் கிராமத்துக்கு காட்டுப்பாதை வழியாக நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவா் மாலை வரை வீடு திரும்பாததால், அவரது உறவினா்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனா்.
இருப்பினும், அவா் கிடைக்காததால், இதுகுறித்து வீரசோழன் காவல் நிலையத்தில் காமாட்சி மகன் கருப்பசாமி புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் ட்ரோன் கேமரா மூலம் கடந்த இரு தினங்களாக அவரைத் தேடி வந்த நிலையில், காமாட்சி உடல் காட்டுப் பகுதிக்குள் அழுகிய நிலையில் கிடந்தது தெரியவந்தது .
இதையடுத்து, காவல் துறையினா் மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






