யோக தரிசன முறையிலான ஆய்வில், சித்தம் 5 வகை நிலைகளில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை – க்ஷிப்த (கொந்தளிப்பு), மூட (மந்தம்), விக்ஸிப்த (குழப்பம்), ஏகாக்ர (ஒருமித்தல்), நிருத்த (நிறுத்தம்). முதல் மூன்று நிலைகளிலும் மனம், ரஜோ குணத்திலும், தமோ குணத்திலும் இருப்பதால், அதாவது உணர்ச்சி மிகுந்தும் அல்லது முடங்கியும் கிடப்பதால், அந்த நிலைகளில் யோகம் சாத்தியமாகாது. சத்வ குணத்தின்பாற்பட்ட ஒருமுனைப்பு, அதன் இறுதியில் கிட்டும் முழுமையான கட்டுப்பாடு ஆகிய இரு நிலைகளில்தான் யோகம் கைகூடும். ஏகாக்ர சிந்தனையின் மூலம், அதாவது குறிப்பிட்ட ஓர் இலக்கைக் குறித்த சஞ்சலமற்ற, தெளிவான, ஒருமித்த சிந்தனை மூலம், சம்பிரக்ஞாத சமாதி (தூயமுனைப்பிலான ஆழ்தல்) என்ற நிலை சாத்தியமாகிறது. இதையே தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, நிறைவாக, எவ்வித சித்த விருத்திகளும், எண்ண மாறுபாடுகளும் ஏற்படாத, அனைத்து எண்ணங்களும் நிறுத்தப்பட்ட அசம்பிரக்ஞாத சமாதி (முனைப்பைக் கடந்த ஆழ்தல்) நிலை அடையப்பெறுகிறது. இந்தச் சமாதி நிலையில், எந்தவொரு இலக்கின் மீதும் சிந்தனை குவியாத, அதனைத் தாண்டி, ஆன்மா (புருஷன்) தனது சுய இருப்பில் லயிக்கின்ற பரமானந்தம் கிட்டுகிறது. இதன்மூலம், பிரகிருதியின் தளைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அடைகின்ற முக்தனாக புருஷன் உயர்கிறது.