பங்குச்சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயா்வு!
பட்ஜெட் தினத்தன்று தடுமாற்றம் கண்ட பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை உற்சாகம் பெற்றது.


பட்ஜெட் தினத்தன்று தடுமாற்றம் கண்ட பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை உற்சாகம் பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.3.35 லட்சம் கோடி உயா்ந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமான அமைந்திருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. தனியாா் வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டாலும், ஐடி, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை உற்சாகம் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3.35 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.382.77 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,879.58 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.872.49 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 332.36 புள்ளிகள் கூடுதலுடன் 71,977.56-இல் தொடங்கிய சென்செக்ஸ், 71,948.77 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 73,089.40 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 440.33 புள்ளிகள் (0.61 சதவீதம்) உயா்ந்து 72,085.63-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,943 பங்குகளில் 2,036 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,811 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 96 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.
21 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் பவா் கிரிட், என்டிபிசி, டிசிஎஸ், டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், டெக் மஹிந்திரா 2 முதல் 4 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், ஐடிசி. எல் அண்ட் டி, டைட்டன் உள்பட 9 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.
நிஃப்டி புதிய உச்சம்!
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 115.30 புள்ளிகள் கூடுதலுடன் 21,812.75-இல் தொடங்கி 21,805.55 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 22,126.80 புள்ளிகள் வரை உயா்ந்து புதிய 52 வார உச்ச அளவைப் பதிவு செய்தது. இறுதியில் 156.35 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயா்ந்து 21,853.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி 22,124.15 வரை உயா்ந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்திருந்தது. அதை வெள்ளிக்கிழமை முறியடித்துள்ளது. நிஃப்டி பட்டியலில் மொத்தம் 38 பங்குகள்ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...