தமிழ் செய்திகள்
பலர் தியாகம் செய்து வளர்த்த திராவிட இயக்கத்தின் அடித்தளத்தை பாஜகவினரால் ஒருபோதும் அசைக்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
5 மாநிலத் தேர்தல்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் வைகோ கூறுகையில்,
"தமிழகத்தில் திமுக வெற்றி பெறும் என்றே பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. கேரளத்தில் பாஜகவினர் உள்ளே ஊடுருவ முயற்சிக்கிறார்கள். அது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். அவர்களால் அங்கு ஊடுருவ இயலாது. ஆனால் மேற்கு வங்கத்தில், நிலைமை சற்று மாறுபட்டதாக இருக்கக் கூடும்.
திராவிட இயக்கம் என்பது தியாகம் மற்றும் துயரங்களின் மீது கட்டமைக்கப்பட்டது. திராவிட இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்துள்ளனர். இந்த இயக்கம் தேர்தலில் வெற்றி பெற்றாலும் சரி, பெறாவிட்டாலும் சரி, திராவிட மண்ணில் ஒரு நிரந்தர சக்தியாகத் திகழும். இது ஒரு நிலையான சக்தியாகவே விளங்கும். பாஜகவினர் தாங்கள் கற்பனை செய்துகொள்வதுபோல, திராவிட இயக்கத்தின் அடித்தளங்களை ஒருபோதும் அசைக்க முடியாது" என்று கூறினார்.
நாம் பாஜகவையும், இந்துத்துவ அச்சுறுத்தலையும் எதிர்த்துப் போராட வேண்டும். அந்த நோக்கத்திற்காகவே நாங்கள் எங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ளோம். நாம் உறுதியாகப் போராடுவோம். அதிலும் குறிப்பாக, தற்போது போதிய அளவில் இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டாத நிலையில் இளைஞர்கள், மாணவர் சமுதாயத்தினரை நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அதுவே திராவிட இயக்கத்திற்கு இன்றியமையாத தேவையாகும்" என்று கூறினார்.
Summary
BJP can never shake the Dravidian movement: vaiko
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







