அப்பாவை அங்கே தேடாதீர்கள்; நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று முதல்வர் விஜய்க்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பேசும்போது, ”உங்க அப்பாவைக் காணோம்” என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து குட்டிக்கதை ஒன்றைக் கூறினார். இது விமர்சனத்துக்குள்ளானது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, திருவாரூர் – காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் உ. மதிவாணனின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசுகையில், “நேற்று முன்நாள்கூட நீங்கள் எல்லாம் டி.வி.யில் பார்த்திருப்பீர்கள். ஒரு காட்சி நடந்தது. அதைப்பற்றி எல்லாம் நம்முடைய முத்தரசனும் குறிப்பிட்டுச் சொன்னார். மற்றவர்களும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். நாட்டில் இன்றைக்கு எத்தனையோ பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், மின்வெட்டு பிரச்சினை; இன்னொரு பக்கம், டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட முடியவில்லை என்ற சூழ்நிலை. நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்... 2021-க்கு பிறகு 5 ஆண்டுகள் நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் நாம் தவறாமல் மேட்டூர் அணையைக் குறித்த நேரத்தில், குறித்த நேரத்திற்கு முன்பேகூட திறந்து வைத்திருக்கிறோம். அதுதான் நம்முடைய ஆட்சி!
இதையெல்லாம் எடுத்துச் சொல்லி எதிர்க்கட்சியின் தலைவராக இருக்கும் நம்முடைய உதயநிதி விளக்கமாக விரிவாக சட்டப்பேரவையில் பேசி, இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அதன் மூலமாக முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருக்கக்கூடியவர் என்ன பதில் சொன்னார்? “எங்கே காணோம்?” “உங்க அப்பாவைக் காணோம்” என்று சொல்லி இருக்கிறார்.
அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறான். அது போதும். நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்.
நான் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. 60 ஆண்டுகளாக மக்களோடு மக்களாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாட்டு மக்களுக்காகப் பணியாற்றக் கூடியவர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, நான் முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான்கு - ஐந்து முறை சென்று ஆய்வு நடத்தி, இன்னும் சொல்கிறேன்... நான் முதலமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், நான் நடத்தியது போன்று ஆய்வுக் கூட்டங்களை எந்த முதலமைச்சரும் நடத்தி இருக்க மாட்டார்கள். நான் பயணம் செய்தது போன்று, எந்த முதலமைச்சரும் பயணம் செய்திருக்க மாட்டார்கள். நான் கோட்டைக்குச் சென்றதுதான் அதிகமாக இருந்திருக்கும்.
இன்னும் கூட சொல்கிறேன், இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் தேடிப் பார்க்க வேண்டும் என்றால், நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்... கோட்டையில்தான் கோப்புகள் எல்லாம் இருக்கின்றன. எனவே, அந்தக் கோப்புகளை எல்லாம் எடுத்துப் பாருங்கள். அதில் நான் கையெழுத்து போட்டிருப்பேன், ‘மு.க. ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்’ என்று. அதனால் நீங்கள் தேடிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் கையெழுத்தைப் பாருங்கள். அதில் தெரியும் உங்களுக்கு.
மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கையெழுத்து போட்டிருப்பேன். அங்கே ஸ்டாலின் இருப்பான். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கோப்பைப் பாருங்கள். அதிலும் மு.க. ஸ்டாலின் கையெழுத்து போட்டிருப்பான். தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆயிரம் ரூபாய். அதிலும் ஸ்டாலின் இருப்பான். எனவே நீங்கள் எங்கும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. கோட்டையிலேயே இருக்கிறேன். நான்தான் ஆட்சியில் இருக்கிறேன்” என்றார்.
Summary
DMK leader M.K. Stalin has replied to Chief Minister Vijay, saying, Do not look for 'Father' there; I will not be where you are looking.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது.. மு.க. ஸ்டாலின் கண்டனம்!

உதயநிதி வைத்த கோரிக்கை! உடனே ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய்!

ஆணழகனே, உன் வாசல் வந்திட வேண்டும்... ரசிகைக்கு விஜய்யின் பதில்!

முதல்வர் விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




