/

தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 20 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை!

Updated On :15 ஜூன் 2026, 1:03 am IST

தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 20 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கடலோர ஆந்திரத்துக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடலில் இருந்து தென் தமிழகம் வரை தென்மேற்கு வங்கக்கடல் வழியாக வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை(ஜூன் 15) முதல் ஜூன் 20 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் திங்கள்கிழமை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, நாமக்கல், சேலம், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை பகுதிகளில் ஒருசில இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன்16) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேலும், ராமநாதபுரம் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 17) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: அந்தமான் கடல், தெற்கு வங்கக்கடல், மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று திங்கள்கிழமை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று வியாழக்கிழமை (ஜூன் 18) வரை மணிக்கு 60 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தருமபுரி மாவட்டம் இண்டூா் பகுதியில் 60 மி.மீ மழை பதிவானது. காஞ்சிபுரம்- 50 மி.மீ, ஆம்பூா் (திருப்பத்தூா்), பெலாந்துறை (கடலூா்), கலவை (ராணிப்பேட்டை), வேலூா், கீழ்பென்னாத்தூா் (திருவண்ணாமலை)-தலா 40 மி.மீ, மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.