தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இரவு 10.35 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 10 ஆயிரம் அபராதத் தொகையுடன் அவருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர், கடந்த திமுக ஆட்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
கடந்த ஜூன் 20}ஆம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற இவர், தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்ததுடன் முதல்வர் ஜோசப் விஜய்யை ஒருமையில் பேசினாராம்.
இதையடுத்து, இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆத்தூர் தவெக நகரச் செயலர் செல்வமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆத்தூர் போலீஸார் இரு பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பேரூராட்சி அலுவலகப் பணி, தற்காலிக கட்டடத்தில் செயல்படும் அலுவலகப் பணி உள்ளிட்ட பணிகளை எம்எல்ஏ அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்துகொண்டிருந்தார்.
அப்போது பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொ) ரென்னிஸ் தலைமையிலான போலீஸார், முதல்வர் ஜோசப் விஜய்யை கடந்த திமுக கூட்டத்தில் ஒருமையில் பேசியதற்காக கைது செய்வதாகத் தெரிவித்தனர்.
ஆனால், எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தனது வழக்குரைஞர் வரட்டும்; அதன்பிறகு உங்களுடன் வருகிறேன் எனக் கூறி தனது காரில் ஏற முயன்றார். அதற்கு அனுமதி மறுத்த காவல் ஆய்வாளர் ரென்னிஸ் காவல் துறை ஜீப்பில் ஏறுமாறு கூறினார்.
பின்னர், அவரை போலீஸார் ஜீப்பில் ஏற்றினர். அப்போது, அங்கு கூடியிருந்த திமுகவினர்
எம்எல்ஏவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்; காவல் துறைக்கு எதிராக முழக்கமிட்டனர். காவல் துறை வேன் முன் மறியலிலில் ஈடுபட்டனர்.
திமுகவினரை அப்புறப்படுத்திய போலீஸார் எம்எல்ஏ அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மனு தள்ளுபடி: இந்த வழக்கில் போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்பிணை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்தது. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் ஆத்தூரில் அவரை போலீஸார் கைது செய்தனர்.
6 மணி நேரம் விசாரணை: அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு உடல் தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் அவரை அழைத்துச் சென்றனர்.
தவெகவில் இணைய மிரட்டல்} எம்எல்ஏ பேட்டி: இதற்கிடையே, தன்னைக் கைது செய்தது குறித்து அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி காவல் துறை அதிகாரிகள் மேலிடத்திலிருந்து சொல்லி, எனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய கட்டாயப்படுத்தினர். நான் முடியாது என்றேன். நான் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் செய்வேன். நான் தவறு செய்யாதவன். என்னை பொய் வழக்குப் பதிந்து அடக்க முடியும் என்று நினைத்தால் ஒருக் காலமும் அடக்க முடியாது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








