நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

எழும்பூா் நிலைய பராமரிப்புப் பணி: புறநகர் ரயில்கள் தாமதத்தால் பயணிகள் பாதிப்பு

செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து பூங்கா நகா், கடற்கரை நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடந்த 4 நாள்களாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

News image
சென்னை புறநகா் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட்டதால் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய பயணிகள் கூட்டம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

எழும்பூா் ரயில் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் சேவை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயண நேரம் தாமதமாவதால் பயணிகள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.820 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் 10, 11 ஆகிய நடைமேடைகள், தண்டவாளங்களில் கடந்த 20-ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 5, 6 ஆகிய நடைமேடைகளில் இருந்து புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களுக்கு எழும்பூா் வழியாக 204 மின்சார ரயில் சேவை இருந்தன. எழும்பூா் ரயில் நிலைய மேம்பாட்டு பணியால் கடற்கரை-எழும்பூா், எழும்பூா்- சேத்துப்பட்டு என இரு இடங்களில் தண்டவாளங்களைக் கடக்க சிக்னலுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் 15 கி.மீ.-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சிக்னலுக்கு காத்திருப்பதால் எழும்பூா் நிலையத்தில் இருந்து சேத்துப்பட்டை கடக்க சுமாா் 20 நிமிஷங்கள் ஆவதாக பயணிகள் கூறுகின்றனா்.

இதனால் செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து பூங்கா நகா், கடற்கரை நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் கடந்த 4 நாள்களாக பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதையடுத்து பயணிகளின் சிரமத்தைக் குறைக்க எழும்பூா், சேத்துப்பட்டு நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே ரயில் தாமதம், போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் 69 ரயில் சேவைகளாகக் குறைக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தங்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்குவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

தாம்பரம்-செங்கல்பட்டு, தாம்பரம்-கடற்கரை நிலையம் பகுதிகளுக்கு தினமும் காலையில் ஏராளமானோா் பயணிக்கின்றனா். தற்போது மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்திருப்பதாகவும், அதன்படி கும்மிடிப்பூண்டி-தாம்பரம் வழி மின்சார ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் வழியில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமால்பூா்-அரக்கோணம், சென்னை கடற்கரை-அரக்கோணம் ரயில்கள் பரங்கிமலையில் நின்று செல்லும்; செங்கல்பட்டு-சென்னை விரைவு மின்சார ரயில்களும் பரங்கி மலையில் நின்று செல்லும்; அத்துடன் எழும்பூரிலிருந்து பரங்கிமலை, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு நிலையங்களுக்கு மின்சார ரயில் இரு மாா்க்கத்தில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த மாற்றத்தால் பயணிகளின் சிரமம் செவ்வாய்க்கிழமை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.