கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடியில் குளிா்சாதன இயந்திரங்கள் உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
ரூ.2091 கோடி முதலீட்டில், 2104 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய ஆலை திறப்பு.


திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடியில், 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குளிா்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
ஜப்பான் நாட்டை சோ்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் காா்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தகவல்தொடா்பு அமைப்புகள், மின்சார, மின்னணு உபகரணங்களை த் தயாரிக்கும் நிறுவனமாகும். இதில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் அறைகளுக்கான குளிா்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி ஆலை திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையின் மூலம் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில், அந்த ஆலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், அரசு தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அலுவலா் தாரேஸ் அகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்
ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், ஆற்றல் மற்றும் மின்சார அமைப்புகள், தொழில்துறை ஆட்டோமேஷன், தகவல் மற்றும் தொடர்பு அமைப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களை தயாரிப்பதில் இணையற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளது. மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்த உலகளாவிய முன்னணி நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
இந்நிறுவனம், 2091 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 2104 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) உற்பத்தி ஆலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 2023-ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தமிழக முதல்வர், இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து இன்றைய நாள் இத்திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்வானது, திட்டங்கள் செயல்பாட்டு நிலைக்கு முன்னேற்றம் பெற, அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் Mitsubishi Electric நிறுவனம் அமைத்துள்ள இத்தொழிற்சாலை, இந்தியாவில் அதன் முதலாவது அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் (Room Air Conditioners) உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்புற அலகுகள், உட்புற அலகுகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் (Compressors) ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் முதலாவது தொழிற்சாலையாகவும் இது இருக்கும். இந்நிறுவனம், இத்திட்டத்தில் இதுவரை ரூ. 1633 கோடி ரூபாய் முதலீடு மேற்கொண்டுள்ளதுடன், 200-க்கும் மேற்பட்ட மகளிர் உட்பட 629 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...