
வறட்சியை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி: முதல்வர் விஜய் உத்தரவு!
வறட்சிப் பாதிப்பை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதைப் பற்றி...
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
வறட்சிப் பாதிப்பை சமாளிக்க ரூ. 288 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், பல்வேறு பகுதிகளில் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு விவசாய பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பொழியாததால், ஜூன் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய காவிரி நீர் திறக்கப்பட்டவில்லை.
குறிப்பாக மழையை மட்டும் நம்பி சாகுபடி செய்யும் விவசாயிகள், வறட்சியின் தாக்கத்தை சமாளிக்க தமிழக அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ச. ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, வறட்சி நிலையை சமாளிக்கும் வகையில் ரூ.288.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், கிணறுகளை சீரமைத்தல், பாசன கால்வாய்களை புனரமைத்தால் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்துக்கு ரூ.58.55 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.36.65 கோடியும் பேரூராட்சித் துறைக்கு ரூ.96.41 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.97.36 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் வசதியை உறுதி செய்யவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தேவையான இடங்களில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கிணறுகளை தூர்வாரி நீர்மட்டத்தை அதிகரித்தல், நீர் சேமிப்பு மற்றும் விநியோக வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம் வறட்சியின் தாக்கத்தை குறைத்து, விவசாயிகளுக்கு தேவையான நீர் வசதியை ஏற்படுத்துவதுடன், சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் உதவியாக இருக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Funds have been allocated for works including the sinking of borewells, the renovation of wells, and the restoration of irrigation canals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




