/

ஆட்சியர் வளாகத்திலிருந்து மூன்றாவது முறையும் தப்பித்த 'குரங்கு ராஜா'!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை பிடியில் இருந்த குரங்கு ராஜா கூண்டில் இருந்து மூன்றாவது முறையாகத் தப்பித்துள்ளதால் வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

News image
குரங்கு ராஜா
Updated On :27 ஜனவரி 2024, 3:26 pm

எஸ்.கே ரவி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை பிடியில் இருந்த குரங்கு ராஜா கூண்டில் இருந்து மூன்றாவது முறையாகத் தப்பித்துள்ளதால் வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்குகள் கூட்டம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வந்தது அங்கு வரும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூட்டம் அலுவலகத்தில் அவ்வப்போது உள்ள கோப்புகளைச் சேதப்படுத்தி வந்தது. இதுதவிர பெண்கள் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இந்த குரங்குகள் கூட்டம் இருந்து வந்தது இது மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களில் உள்ள பொருட்களை லாவகமாக எடுக்கும் குரங்குகள் கூட்டம் அதிலிருக்கும் தின்பண்டங்களையும் பல பொருட்களையும் சேதப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க வனத்துறை சார்பில் அவ்வப்போது கூண்டுகள் வைத்து அதில் பிடிபடும் குரங்குகளை வேப்பனப்பள்ளி அடுத்துள்ள ஆந்திர வனப்பகுதிகளில் கொண்டு சென்று விட்டு வந்தனர் இந்நிலையில் இந்த குரங்கு கூட்டங்களுக்கு ராஜாவாக திகழ்ந்த குரங்கு ராஜா கடந்த இரு தினங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த வனத்துறை கூண்டில் சிக்கியது இரண்டு நாட்களாக கடும் போராட்டத்தை நடத்தி வந்த குரங்கு கூண்டில் இருந்து தப்பிக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டது.

குரங்கு ராஜா பிடிபட்டு இரண்டு நாளாகியும் அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்கு எடுத்துச் செல்லாமல் இருந்துள்ளனர். அப்போது குரங்கு கூண்டிலிருந்து தப்பிக்க பலமுறை முயன்று உள்ளது. இதனால் குரங்கின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய நிலையில் இன்று மாலை பிடிபட்ட குரங்கு ராஜாவை, வனப்பகுதியில் விட மற்றொரு கூண்டுக்கு மாற்றும் முயற்சியில் வனத் துறையினர் ஈடுபட்டனர். அப்போது திடீரென பாய்ந்து துள்ளிய குரங்கு ராஜா, இரும்பு கூண்டின் கதவை  திடீரென தகர்த்து தப்பியது. இதனால்  நிலைகுலைந்து போன வனத்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

Story image

இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் இந்த குரங்கு ராஜா ஏற்கனவே இருமுறை கூண்டில் சிக்கி அதிலிருந்து தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குரங்கு ராஜாவின் தொடர் அடாவடியால் வனத்துறையினர் கலக்கமடைந்துள்ளனர்.      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.