பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாதி சான்றிதழ் 25 ஆண்டுகளாக அவதியுறும் ஈழுவா-தீயா சமூக மக்கள்!

உதகை : சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்று குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், சாதிச் சான்றிதழ் கூட கொடுக்காமல் 25 ஆண்டுகளாய் ஈழுவா-தீயா சமூகத்தினரை அலைக்கழித்து

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:57 pm

ஏ. பேட்ரிக்

உதகை : சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் முன்னேற வேண்டும் என்று குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், சாதிச் சான்றிதழ் கூட கொடுக்காமல் 25 ஆண்டுகளாய் ஈழுவா-தீயா சமூகத்தினரை அலைக்கழித்து வருவது மலைவாழ் மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல தலைமுறைகளாக தேநீர்க் கடைகள், அடுமனைகள், தைலம் காய்ச்சும் தொழில்களிலும், விவசாயத் தோட்டங்களில் கூலிப் பணியிலும் ஈடுபட்டுள்ள மலையாளிகளில் ஈழுவா-தீயா என்ற இனத்தார் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள், நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகையில் கணிசமான அளவில் உள்ளனர்.

இந் நிலையில் தங்கள் கோரிக்கைகளுக்காக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஈழுவா-தீயா நலச்சங்கம், நாராயண குரு தர்ம பரிபாலன சங்கம், ஈட்டுவா இளைஞர் அணி, மகளிர் அணி என பல்வேறு குழுக்களும், மஞ்சள் கொடியுடன் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஜாதா என்ற  வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம், கோரிக்கை முழக்கம் என

களமிறங்கியுள்ளனர்.

  இவர்களது பிரச்னை குறித்து ஈழுவா-தீயா நலச் சங்கப் போராட்டக் குழுத் தலைவர் விஜயன் கூறியது:

எல்லோரையும் போல், இவர்களுக்கும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்று வழங்கப்பட்டது. கடந்த 1986-ம் ஆண்டு வரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் வழங்கப்பட்ட சாதி சான்றுகள், கடந்த 1993-ல் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டன.

இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் என பலரிடம் முறையிட்டும், நீதிமன்றங்களை நாடியும் இதுவரை பிரச்னை தீரவில்லை. இதனால், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

கர்நாடகம், ஆந்திரம், தில்லி என நாட்டின் எந்தப் பகுதியில் வசித்தாலும்,  பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் மட்டும் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.

நீலகிரி மாவட்டத்தின் பல பள்ளிகளில் பயிலும் ஈழுவா, தீயா சமூகக் குழந்தைகள், பல ஆண்டுகளாக மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். ஆனால் சாதிச் சான்றிதழ் இல்லாத காரணத்தால், உயர்கல்வியும், வேலைவாய்ப்பும் எட்டாக் கனியாகி விட்டது. கடந்த 1993-லிருந்து இவர்களில் யாருக்குமே அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே இவர்களின் ஆதங்கம்.

மாநிலத்துக்குள்ளேயே

மாற்றாந்தாய் மனப்பான்மை?

இவர்களுக்கு எதற்காக சாதிச் சான்றிதழ் மறுக்கப்படுகிறது என அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழகத்தில் செங்கோட்டை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டும் ஈழுவா, தீயா சமூகத்தினர் வசிப்பதால், நீலகிரியில் வசிப்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்க முடியாது என்கின்றனர்.

ஒரு மாநிலத்தின் ஒரு பகுதியில் இருப்பவர்களுக்கு சாதி சான்றிதழ் கொடுக்கப்படும்போது, மற்றொரு பகுதியில் இருப்பவர்களுக்கு ஏன் கொடுப்பதில்லை என்பதே இச் சமூகத்தினரின் பிரதான கேள்வி.

ஈழுவா என்ற பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்க தமிழக அரசிதழிலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகளின் மனநிலைக்கு ஏற்பதான் சாதி சான்றிதழ் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

முதல்வர் வாக்குறுதி

கடந்த தேர்தலின்போது கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி, ஈழுவா-தீயா பிரிவினருக்கு மீண்டும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும் என அளித்த வாக்குறுதி, இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

இந்த சூழலில் தங்களது வலிமையைக் காட்டவும், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் உதகையில் வரும்  25-ம் தேதி மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பிறகாவது, கோரிக்கைக்கு  அரசு செவிசாய்க்குமா என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.