நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.

News image
ரியான் ரிக்கல்டான்- படம் | AP
Updated On :21 பிப்ரவரி 2025, 1:07 pm

DIN

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான்

தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டான் மற்றும் டோனி டி ஸார்ஸி களமிறங்கினர். டோனி டி ஸார்ஸி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் அடித்து விளையாடிய ரியான் ரிக்கல்டால்ன் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

315 ரன்கள் குவிப்பு

கேப்டன் டெம்பா பவுமா அரைசதமும், ரியான் ரிக்கல்டான் சதமும் எடுத்து ஆட்டமிழக்க, ராஸி வாண்டர் துசென் மற்றும் அய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய ராஸி வாண்டர் துசென் 46 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய அய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 52 ரன்கள் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Story image

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.