பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்தியா-ஆஸி. பாக்ஸிங் டே டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 3 மடங்கு அதிகம்!

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image
இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா- ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்
Updated On :24 செப்டம்பர் 2024, 1:44 pm

DIN

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் மூன்று மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாக்ஸிங் டே

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் முன்பு பெரிய பெட்டி வைத்து, கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயத்துக்கு வருபவர்கள் அந்தப் பெட்டியில் பணம், பரிசுகள் போன்றவற்றை நன்கொடையாக செலுத்துவார்கள்.

Story image

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான டிசம்பர் 26 ஆம் தேதி அன்று அந்தப் பெட்டியைப் பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருள்களை வறுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும் வழங்குவது வழக்கம். இவ்வாறு பெட்டியைத் திறக்கும் நாள்தான் அந்த நாடுகளில் ‘பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

பாக்ஸிங் டே கிரிக்கெட்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாளான, டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே கிரிக்கெட் என்று அழைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் 1950 ஆம் ஆண்டில் இருந்தே ஆண்டாண்டு காலமாக பாக்ஸிங் டே அன்று சர்வதேசப் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியா-ஆஸ்திரேலியா

நடக்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஒருபகுதியாக பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டி நடத்தப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக மெல்போர்னில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. பாக்ஸிங் டே கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பே தனி.

அந்தவகையில், 90,000 பேர் அமரக்கூடிய மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெறும் பாக்ஸிங் டே கிரிக்கெட்டுக்கான டிக்கெட் விற்பனை மூன்று மடங்கு அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.

கடந்த முறை இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடும் போது டிக்கெட் விற்பனை 5.5 மடங்கு உயர்ந்துள்ளது.

இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு

2018-2019 ஆண்டில் வந்த சுற்றுலாப்பயணிகளை (0.7 சதவீதத்துடன்) ஒப்பிடும்போது, ​​பாக்சிங் டே டெஸ்டுக்கான தற்போதைய டிக்கெட் வாங்குபவர்களில் 3.9 சதவீதம் பேர், இந்திய சுற்றுலாப் பயணிகள் என்று புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.

விராட் கோலி தலைமையில்...

இந்தியா தனது கடைசி 2 சுற்றுப்பயணங்களிலும் பார்டர்- கவாஸ்கர் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.

இதற்கு முன் நடந்த இரண்டு தொடர்களிலும் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து கேப்டன்கள் விராட் கோலி மற்றும் அஜிங்க்யா ரஹானே தலைமையின்கீழ் இந்திய அணி வரலாறு படைத்தது.

ஆஸ்திரேலியாவில் மீண்டும் வரலாறு படைக்குமா இந்தியா?

அதே போல நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் பாட் கம்மின்ஸின் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர் கோப்பை வென்று மீண்டும் வரலாறு படைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பெர்த், அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் இதுவாகும். அடிலெய்டில் டிசம்பர் 6-10 தேதிகளில் திட்டமிடப்பட்ட இரண்டாவது டெஸ்ட், பகல்-இரவு ஆட்டமாக நடக்க இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிக்கான அட்டவணை

முதல் டெஸ்ட்- பெர்த்- நவம்பர் 22-26

2-வது டெஸ்ட்- அடிலெய்டு- டிசம்பர் 6-10

3-வது டெஸ்ட்- பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18

4-வது டெஸ்ட் - மெல்போர்ன் -டிசம்பர் 26-30

5-வது டெஸ்ட் - சிட்னி - ஜனவரி 3-7

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.