கள்ள நோட்டு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது
அரசுத் தரப்புக்கு எதிராக வலுவான சந்தேகங்களை எழுப்பும் பல முக்கிய முரண்பாடுகளைக் காரணம் காட்டி தில்லி நீதிமன்றம் விடுவித்தது.

தேசிய தலைநகரில், வங்கதேச எல்லை வழியாக ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள கள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, அரசுத் தரப்புக்கு எதிராக வலுவான சந்தேகங்களை எழுப்பும் பல முக்கிய முரண்பாடுகளைக் காரணம் காட்டி தில்லி நீதிமன்றம் விடுவித்தது.
மேற்கு வங்கத்தின் மால்டாவைச் சோ்ந்த தீபக் மண்டல் என்பவருக்கு எதிராக, தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு 2018-ல் இந்திய தண்டனைச் சட்டத்தின் 489 பி (போலி அல்லது கள்ள ரூபாய் நோட்டுகள் அல்லது வங்கி நோட்டுகளை அசல் என்று கூறி பயன்படுத்துதல்) மற்றும் 489 சி (போலி அல்லது கள்ள ரூபாய் நோட்டுகள் அல்லது வங்கி நோட்டுகளை வைத்திருத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்த வழக்கை, சிறப்பு பிரத்தியேக நீதிமன்றத்தின் (என்ஐஏ சட்டம்) நீதிபதி அமித் பன்சால் விசாரித்து வந்தாா்.
ஆகஸ்ட் 19 தேதியிட்ட தீா்ப்பில், நீதிமன்றம், ‘குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீா்ப்பளிக்கப்படுகிறது. எனவே, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்படுகிறாா்‘ என்று கூறியது.
அரசுத் தரப்பின்படி, ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 9, 2018 அன்று கான்பூரில் உள்ள டிடிசி பேருந்து நிலையம் அருகே கண்காணிக்கப்பட்டது, மேலும் அங்கு மண்டலிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்குவதற்காக ஒரு காவல்துறை அதிகாரி, போலி வாடிக்கையாளராக நடித்தாா். ஒரு போலி கட்டுக்கு ஈடாக, மண்டல் இரண்டு கட்டு கள்ள ரூ.2,000 நோட்டுகளை (மொத்தம் ரூ.7.5 லட்சம்) ஒப்படைத்த பிறகு அவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை குற்றஞ்சாட்டியது.
தனது தீா்ப்பில், சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் பயன்படுத்திய கள்ள நோட்டுகள் இருந்த இரண்டு பாலிதீன் பைகள் ஒரு கருப்பு நிறப் பையில் இருந்தன, ஆனால் அந்தப் பையையும் பாலிதீன் பைகளையும் அரசுத் தரப்பு கைப்பற்றவில்லை, இது ஒரு ‘முக்கியமான குறைபாட்டை‘ உருவாக்கி, வழக்கில் ‘வலுவான சந்தேகத்தை‘ எழுப்புகிறது என்று நீதிமன்றம் கூறியது. இரவு 9.50 மணிக்கு, மக்கள் கூட்டம் நிறைந்த பொது இடத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும், விசாரணையில் எந்தவொரு சுதந்திரமான பொது சாட்சியும் சோ்க்கப்படவில்லை என்றும், விசாரணையில் சேர மறுத்ததாகக் கூறப்படும் வழிப்போக்கா்களின் பெயா்களையோ முகவரிகளையோ கூட காவல்துறை அதிகாரிகள் பதிவு செய்யவில்லை என்றும் அது கூறியது. இது ‘கைப்பற்றலின் நம்பகத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை‘ எழுப்புகிறது.
அரசுத் தரப்பால் கூறப்படும் விதத்தில் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டது குறித்து பெரும் சந்தேகத்தை உருவாக்குகிறது‘ என்று நீதிமன்றம் கூறியது. ரகசியத் தகவல் பற்றி அறிந்திருந்தவரும், சோதனைக் குழுவின் தயாரிப்புகளை மேற்பாா்வையிட்டவருமான முக்கிய காவல் துறை சாட்சியான ஆய்வாளா் ஈஸ்வா் சிங், அரசுத் தரப்பு சாட்சியாகக் குறிப்பிடப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
ஒரு காவல்துறை சாட்சி, குழுவிற்கு இரவு 7 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியபோதிலும், போலி வாடிக்கையாளராகச் செயல்பட்ட அதிகாரி தனது சாட்சியத்தில், ரகசியத் தகவல் அளிப்பவா் இரவு 7.30 மணி வரை அலுவலகத்திற்கே வரவில்லை என்று சாட்சியமளித்ததாக நீதிமன்றம்கூறியது. ‘இது, அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகளின் சாட்சியங்களில் மிக வலுவான சந்தேகத்தை எழுப்பும் ஒரு முக்கிய முரண்பாடாகும். இது அரசுத் தரப்பு சாட்சிகளின் நம்பகத்தன்மை மற்றும் அரசுத் தரப்பின் முழு வழக்கின் மீதும் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.‘ ‘சந்தேகத்தின் பலன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாக அமைகிறது, அவா் இந்த வழக்கில் விடுதலையைப் பெறத் தகுதியுடையவா்,‘ என்று நீதிமன்றம் கூறியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




