கிருஷ்ணா, கேரள மாநிலம் திருச்சூரில் இருக்கும் மலா பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது தந்தை அஜய் காளிந்தி, தாயார் இந்து. இத்தம்பதியினரின் ஒரே குழந்தை கிருஷ்ணா. அஜய் காளிந்தி மலாவில் இருக்கும் விஷ்ணு ஆலயத்தின் அர்ச்சகராகப் பணிபுரிகிறார். பெரிய வருமானமென்று சொல்ல முடியாது. ஆயினும் தன் மகளுக்கு குதிரைகளின் மீது இருந்த ப்ரியத்தைக் கண்டு கிருஷ்ணாவின் 11 ஆம் பிறந்த நாளின் போது சாம்பல் நிறக் குதிரை ஒன்றைப் பரிசளித்திருக்கிறார். பிறகு கிருஷ்ணா 10 ஆம் வகுப்பில் சேர்ந்ததும் புதிதாக ஒரு வெள்ளைப் புரவியும் பரிசாக வந்து சேர்ந்தது. இந்த இரண்டு குதிரைகள் மட்டுமல்லாது மேலும் ஒரு பசு மற்றும் எருமை மாடும் வளர்க்கிறார்கள். வீட்டு மனிதர்களோடு விலங்குகளையும் சேர்த்தால் இப்போது அஜயின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 7. இவர்களைப் பராமரிப்பதே தற்சமயம் போதுமானதாக இருப்பதால் இனி மேற்கொண்டு குதிரைகளை வாங்கித் தன் மகளுக்கு பரிசளிக்கப்போவதில்லை என்று சிரிக்கிறார் அஜய். குதிரைகளின் மீதான மகளின் ஆசை பெரிதில்லை... ஆனால், பெண் பிள்ளைக்கு குதிரையேற்றமெல்லாம் எதற்கு? என்று தட்டிக் கழிக்காமல் கிருஷ்ணாவின் ஆசையை நிஜமாக்கிய தகப்பன் என்ற வகையில் அஜயைப் பாராட்ட வார்த்தையில்லை.