திருநங்கைகள் மின்சார ரயில்கள், பேருந்து நிலையங்கள், பிரசித்தி பெற்ற கோயில் வளாகங்கள், நகரத்தின் ஜன நெருக்கம் மிகுந்த சாலைகள், டிராஃபிக் சிக்னல்கள் என்று பிச்சையெடுக்கிறார்கள். அவர்களுக்கு பணம் தராமல் நகர்பவர்களை அவர்கள் சும்மா விடுவதும் இல்லை... சபிப்பதும், இன்னோரன்ன வார்த்தைகளில் திட்டுவதும் சர்வ சாதாரணமாக பலருக்கும் காணக்கிடைக்கின்ற காட்சிகளே! இந்த விஷயத்தை மையமாக வைத்து தினமணியில் சில மாதங்களுக்கு முன்பு சிறப்புக் கட்டுரை கூட வெளிவந்தது. ஒரு பக்கம் திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காகவும், சமூக அங்கீகாரத்துக்காகவும் அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. திருநங்கைகளில் ஒரு சிலர் இந்தியக் குடிமைப் பணித்தேர்வுகளில் வென்று அதிகாரிகளாகவும் ஜெயித்திருக்கிறார்கள். மூன்றாம் பாலினமாக அவர்களுக்கு ஒரு நல் விடியல் கிடைத்திருக்கிறது. குடிமைப்பணிகள், காவல்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சினிமா, மருத்துவத்துறை என அவர்களில் பலர் ஸ்திரமான முன்னேற்றம் பெற்று இன்று அவர்களைப் பற்றிய சமூகப் பார்வையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆயினும் இன்னும் பிச்சையெடுக்கும், பாலியல் தொடர்பான சொற்களைக் பிரயோகித்து தங்களுக்கு பணம் தராதவர்களை அச்சுறுத்தும் திருநங்கைகளும் இருக்கிறார்களே?