அது ஒரு பட்டரைப் பழைய புளிய மரம் தான். பெருத்த விசேஷம் ஒன்றும் இல்லை அதில்... இற்றுப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத் தண்டில் எக்கச்சக்கமான ஆணிகளை திசைக் கணக்கின்றி அடித்து இறக்கியிருந்தார்கள். பாரதி அக்கா, சியாமளா, சௌம்யா, ஹேமா சகிதம் பள்ளிக்கு நடந்து போகையில் பாரதி அக்கா சொல்லச் சொல்ல பலமுறை இந்தப் புளிய மரத்தை பற்றி வித விதமான கதைகளை ஜானா காதுகுளிர கேட்டிருக்கிறாள். பகலில் காது குளிரும், இரவிலோ மனம் குளிரும், போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து இறுக்க மூடிப் போதாக் குறைக்கு பாட்டியின் இடுப்பைக் கட்டிக் கொண்டு தூங்கினாலுமே பலநாட்கள் பயத்தில் உடம்பும் மனமும் உதறிக் கொண்டே தான் இருக்கும். அந்த மரத்தின் ஐவேஜு அப்படி!