வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?

ஆஸ்துமா உள்ள சுவாசப் பிரச்னைகள் உள்ள குழந்தைகளின் நலன் பற்றி....

News image

கோப்புப் படம் - IANS

Updated On :30 ஏப்ரல் 2026, 8:47 am

- உன்னிகிருஷ்ணன். எஸ்

நவீன வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் காரணங்களால் குழந்தைகளிடையே ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. வீட்டிலேயே இந்த பாதிப்புக்கான உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பலரும் கடுமையான விளைவுகளைச் சந்திப்பதாக கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரியின் நுரையீரல் மருத்துவப் பேராசிரியரும் தலைவருமான டாக்டர் பி.எஸ். ஷாஜஹான் கூறுகிறார்.

கேள்விகளும் பதில்களும்..

வீட்டு நெபுலைசர்கள்(nebulizers) சாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அவசியமானவையா?

இல்லை, நெபுலைசர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொருத்தமானவையாக இருக்கின்றன. அதாவது இன்ஹேலர்களைப் பயன்படுத்த முடியாத நோயாளிகள், கடுமையான ஆஸ்துமா அல்லது முற்றிய சிஓபிடி (COPD) உள்ளவர்கள் அல்லது ஒரு அவசரக்கால மாற்று ஏற்பாடாக நெபுலைசர்களைப் பயன்படுத்தலாம்.

உண்மையான ஆபத்து என்னவென்றால், ஒரு நெபுலைசர் தற்காலிக நிவாரணம் அளிக்கிறது. இதனால் நீண்டகால பாதிப்புகள் பெரிதாகத் தெரிவதில்லை. நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் செல்லும் வரை அவர்களுக்கு சிகிச்சை தாமதமாகிறது. குறிப்பாக மருத்துவரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு இதனைப் பயன்படும்போது ஆபத்தானது. ஆஸ்துமா தொடர்பான குழந்தைகளின் இறப்புகளுக்கும் இது ஒரு காரணமாக உள்ளது. அதேபோல முறையாகச் சுத்தம் செய்யப்படாத நெபுலைசர்களில் நுண்ணுயிரிகள் தங்கி, கடுமையான நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை.

Story image

IANS

நுரையீரல் பாதிப்புள்ள நகர்ப்புறத்தில் வசிப்போர், காற்று மாசுபாடு பற்றி என்ன தெரிந்துகொள்ள வேண்டும்?

வெளியே செல்வதற்கு முன் தினமும் காற்றின் தரக் குறியீட்டைச் சரிபார்க்க வேண்டும். அது மிகவும் மோசமாக இருக்கும்போது வீட்டிற்குள்ளேயே இருப்பது நல்லது. அவசியம் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணிய மாசுத் துகள்கள் (PM2.5) சுவாசம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

காற்று மாசுள்ள இடங்களில் செல்லும்போது முகக்கவசங்கள் உண்மையான பாதுகாப்பை வழங்குவதில்லை. என்95 முகக்கவசங்கள் சரியாக அணிந்து பயன்படுத்தும்போது பாதுகாப்பானது. வீட்டிற்குள் பொருள்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, கொசுவர்த்திகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமைக்கும்போது காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும்.

அதிக மாசுபாடுள்ள நாள்களில், அதிக மாசுபாடுள்ள இடங்களில் வெளியில் சென்று நடப்பது, உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வெளியில் உடற்பயிற்சியின்போது ஆழமாக சுவாசிப்பது, அதிக மாசடைந்த காற்றை நுரையீரலுக்குள் இழுக்கிறது. இதனாலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

Story image

IANS

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் வெளியில் விளையாடலாமா?

ஆஸ்துமா உள்ள குழந்தைகள் விளையாடலாம், அவர்கள் கண்டிப்பாக விளையாடவும் வேண்டும். உடல் செயல்பாடு சுவாசத் தசைகளை வலுப்படுத்துகிறது, நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது.

ஒலிம்பிக் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்களுக்கு ஆஸ்துமா உள்ளது. அவர்கள் தொடர்ந்து விளையாட்டுகளில் ஈடுபட்டு போட்டியிடுகிறார்கள். உடற்பயிற்சியால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள குழந்தைகளுக்கு பயிற்சியில் ஈடுபடுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்பு அவசரகால இன்ஹேலரை ஒன்று அல்லது இரண்டு முறை உள்ளிழுப்பது நல்லது. இதனால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தொடங்கியவுடன் தீவிரமான பயிற்சி செய்யாமல், முதல் 10-15 நிமிடங்கள் மிதமான அளவில் தொடங்க வேண்டும். ஒரு குழந்தை எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபடுவதற்கு முன்பு வழக்கமான மருந்துகள் மூலம் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆஸ்துமா தீவிரமடையும்போது ஓய்வெடுப்பதே சரியான முடிவு.

Summary

Kids with asthma should play sports, it improves lung muscles, capacity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.