சாத்தூரை அடுத்த அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜின் மனைவி உமா(30). இவர் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்தில் கணிப்பொறி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் புதன்கிழமை காலையில் 10 மணிக்கு நீதிமன்ற பணி செய்வதற்காக வளாகத்திற்கு முன்பு நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பின்புறமாக வந்த ஒருவர் திடீரென கண் இமைக்கும் நேரத்தில் உமாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையைச் பறிக்க முயற்சிக்கையில் உமாவும் விடாமல் போராடினாராம். அதோடு, உடனே அப்பகுதியில் இருந்தவர்களை சத்தம் போட்டு உதவிக்கு அழைத்தார். அதற்குள், நகையை பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சிக்கையில் பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த சூலக்கரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.