விருதுநகர் தனியார் அரங்கத்தில் மதுரை மண்டல அளவிலான பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 21-வது பொது மாநாடு 20,21 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.இதில், ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் பங்கேற்ற அகில இந்திய பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.என்.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து ரூ.43,292 கோடி பிரிமியம் தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ.2900 கோடி லாபம் கிடைத்துள்ளது. மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உண்மையான, நேர்மையான முறையில் 90 சதவீதம் வரையில் இழப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இன்ஸ்சூரன்ஸ் துறையில் உலக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளது. இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு வரும் பொது இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வழங்க மக்களவையில் மசோதா கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.