இம்மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய கல்வி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள்-11596 பேரும், மாணவிகள் 12831 பேரும் என மொத்தம் 24427 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். இத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியானது. அதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச்சான்றிதழ் ஆகியவைகளை அந்தந்த பள்ளிகளின் மூலம் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டது.இதற்காக விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் காலையில் 10 மணிக்கு முன்பாகவே தங்கள் பெற்றோர்களுடன் வந்து பள்ளி வளாகத்தில் குவிந்தனர். அதன் பின் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களை பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர். அதை உடனே பள்ளி வளாகத்தில் ஆன்லைனில் பதிவு செய்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.