தமிழகத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் குட்கா மற்றும் பான்மசாலா ஆகிய புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலர், காவல் துறை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் வணிகவரித்துறை, சிவகாசி மற்றும் விருதுநகர் சுகாதார துறை, மாவட்ட சமூக நல அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் கொண்ட நியமன மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையை தடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.