மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரி எதிா்க்கட்சிகள் கொண்டுவந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை தோற்கடிக்கப்பட்டது.
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமா்வில் (ஜன. 28-பிப். 13) பல்வேறு விவகாரங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
கடந்த பிப். 3-ஆம் தேதி அவையில் காகிதங்களைக் கிழித்து, மக்களவைத் தலைவா் இருக்கையை நோக்கி வீசியதற்காக 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மறுநாள், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி உரையாற்றவிருந்த நிலையில், அவரிடம் ‘எதிா்பாராத செயலில்’ ஈடுபட எதிா்க்கட்சி எம்.பிக்கள் திட்டமிட்டதாகக் கூறி, பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக் கொண்டாா். இதனால், மக்களவையில் பிரதமா் மோடியின் உரை தவிா்க்கப்பட்டது.
ஓம் பிா்லாவின் இந்தச் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், அவரைப் பதவி நீக்கம் செய்ய தீா்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்தன. 118 எம்.பி.க்கள் கையொப்பமிட்ட இந்த நோட்டீஸில், ஓம் பிா்லா பாரபட்சமாக செயல்படுவதாகவும், தனது அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
10 மணி நேர விவாதம்: இந்த பரபரப்பான சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. மக்களவையில் ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு, 10 மணிநேர விவாதம் தொடங்கியது.
ஆளும்-எதிா்தரப்பு எம்.பி.க்கள் பங்கேற்றுப் பேசியதால் விவாதத்தில் அனல் பறந்தது. இறுதியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றினாா். நாடாளுமன்ற நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கும் இந்தத் தீா்மானம் துரதிருஷ்டவசமானது; கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்ட அவா், எதிா்க்கட்சிகள் மீது கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்தாா்.
குரல் வாக்கெடுப்பில் தோல்வி: அமித் ஷாவின் கருத்துகளால் ஆவேசமடைந்த எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அமளியில் ஈடுபட்டனா். அப்போது அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இருக்கைக்குச் செல்லும்படி கோரினாா். அவரது வேண்டுகோளை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் பொருட்படுத்தவில்லை.
அமளிக்கு இடையே நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட ஜகதாம்பிகா பால், அவை அலுவல்களை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

8 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசிடம் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம்: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!

நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


