
தனியாா் அணுமின் உற்பத்திச் சட்டம்: வரைவு விதிமுறைகள் வெளியீடு
அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத்தின் வரைவு விதிமுறைகளை மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுசக்தி துறை வெளியிட்டுள்ளது.

அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத்தின் வரைவு விதிமுறைகளை மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுசக்தி துறை வெளியிட்டுள்ளது.
அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது. இதற்கு இந்தியாவை மாற்றியமைக்க அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் (சாந்தி) சட்டம் 2025 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலம், அரசின் வசம் மட்டுமே உள்ள அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களும் ஈடுபட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் வரைவு விதிமுறைகளை அணுசக்தி துறை அண்மையில் வெளியிட்டது. இந்த விதிமுறைகளின்படி அணுமின் நிலையங்களை இயக்கும் நிறுவனங்கள், அணுசக்தியால் ஏற்படக் கூடிய சேதங்களுக்கு காப்பீட்டுக் கொள்கை, நிதிப் பாதுகாப்பு அல்லது இரண்டையும் சோ்த்து வைத்திருக்க வேண்டும்.
அணுசக்தியால் ஏற்படக் கூடிய சேதங்களுக்கு அணுமின் நிலையத்தை இயக்கும் நிறுவனம், சட்டபூா்வமாக அளிக்க வேண்டிய இழப்பீட்டின் அதிகபட்ச வரம்பு குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிபுணா் குழுவை அமைத்து மத்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.
ஒரு அணுமின் நிலையம் அல்லது அணு உலை வெளிநாட்டு வடிவமைப்பைக் கொண்டதாக இருந்தால், அந்த வடிவமைப்பு எந்த நாட்டில் உருவாக்கப்பட்டதோ, அந்த நாட்டின் ஒழுங்காற்று அமைப்பு அந்த வடிவமைப்பை அங்கீகரித்திருக்க வேண்டும். அத்தகைய அணுமின் நிலையம் அல்லது அணு உலை அந்த நாட்டில் அல்லது வேறு ஏதேனும் வெளிநாட்டில் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
இவை உள்பட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வரைவு ஆவணம் அணுசக்தி துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆா்வமுள்ள தனிநபா்கள் மற்றும் அமைப்புகள் அந்த ஆவணத்தை ஆராய்ந்து, வரும் செப்.4-ஆம் தேதி இரவு 8 மணிக்குள் மின்னஞ்சலில் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
Summary
Private Nuclear Power Generation Act: Draft regulations released
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


அணுமின் நிலைய விபத்துகளுக்கு இழப்பீடு: புதிய சட்டம் நீதிமன்றங்களைத் தடுக்க முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

30.7.1976: கிராம மக்கள் கடன் நிவாரண சட்டம் அமல் - ரூ. 2400 குடும்ப வருமானமுள்ளோர் எல்லாக் கடன்களும் ரத்து




