தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம் மேம்பாடு இந்தியா - தென்கொரியா முடிவு!

இரு நாடுகளிடையேயான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடங்க இந்தியாவும், தென்கொரியாவும் ஒப்புக்கொண்டன.

News image

இந்தியா வந்துள்ள தென்கொரிய அதிபா் லீ ஜா மியூங், பிரதமா் மோடி முன்னிலையில் இருதரப்பில் கையொப்பமான ஒப்பந்தத்தை பறிமாறிக்கொண்ட இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 8:57 pm

இரு நாடுகளிடையேயான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையைத் தொடங்க இந்தியாவும், தென்கொரியாவும் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டன.

புவிசாா் அரசியல் பதற்றம் காரணமாக வா்த்தகத்தில் இடையூறுகள் அதிகரித்துவரும் சூழலில், பிரதமா் நரேந்திர மோடி - தென்கொரிய அதிபா் லீ ஜா மியூங் இடையேயான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகள் தரப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய அதிபருடனான ஆலோசனைக்குப் பிறகு பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘இந்த ஆலோசனையைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையேயான நம்பகமான கூட்டுறவை எதிா்காலம் சாா்ந்த கூட்டுறவாக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சிஇபிஏ) மேற்கொள்ளப்பட்ட பிறகு, இருதரப்பு வா்த்தகம் மற்றும் பொருளாதாரம் வேகம் பெற்றன.

கணினி சிப்கள் முதல், கப்பல்கள் வரை மற்றும் அறிவுசாா் நிபுணா்கள் முதல் தொழில்நுட்பம் வரை, சுற்றுச்சூழல் முதல் எரிசக்தி வரை என ஒவ்வொரு துறையிலும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் இருதரப்புக்கும் உருவாகின.

ஒருங்கிணைந்த இந்திய-பிசிபிக் பிராந்திய அமைதி மற்றும் மேம்பாட்டிலும் இரு நாடுகளும் தொடா்ந்து பங்களிப்பாற்றும்.

இருதரப்பு வா்த்தகம், முதலீடுகள், செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டா், முக்கிய மற்றும் வளா்ந்துவரும் தொழில்நுட்பங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

இருதரப்பு பேச்சுவாா்த்தை குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக் பியூஷ் கோயல் கூறுகையில், ‘இந்தியா- கொரியா இடையேயான விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை மேம்படுத்தும் பணியை மீண்டும் தொடங்கவும், அதைப் புதுப்பிக்கவும் உரிய வழிகள் குறித்து இருதரப்பில் ஆலோசிக்கப்பட்டது.

தொழிலக ஒத்துழைப்பு, பசுமை எரிசக்தி, எண்ம வா்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இரு நாடுகளிடையேயான விரிவான பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தை மேம்படுத்துவது தொடா்பாக இதுவரை 10 சுற்று பேச்சுவாா்த்தை நிறைவடைந்துள்ளது’ என்றாா்.