தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உங்கள் நம்பிக்கையே என் சொத்து: வாராணசியில் மோடி பேச்சு

உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய சொத்து என வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

News image
Updated On :18 ஜூன் 2024, 2:49 pm

உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய சொத்து என வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது தொகுதி மக்களின் கனவை நிறைவேற்றுவதற்காக உழைக்க என்னை மேலும் ஊக்குவிக்கும் எனக் கூறினார்.

வாராணசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து முதல்முறையாக அத்தொகுதிக்குச் சென்றார். இங்கு பிரதமர் கிஷான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தவணையை நேரடிமுறை பணப் பரிமாற்றம் மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய சொத்து. இது உங்களுக்காக உழைக்க என்னை மேலும் ஊக்குவிக்கும். உங்கள் கனவு மற்றும் இலக்கை நிறைவேற்ற இரவு பகலாக நான் உழைப்பேன்.

தேர்தல் முடிவுகள் புதிய வரலாற்றை படைத்துள்ளது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மூன்றாவது முறையாக ஆளும் கட்சியே மீண்டும் தேர்வு செய்யப்படுவது மிகவும் அரிதாகவே நடக்கும். இது 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்தது. அதன் பிறகு எந்தவொரு ஆட்சியும் தொடர்ந்து ஹாட்ரிக் அடித்ததில்லை. உங்கள் சேவகன் மோடிக்கு இந்த வாய்ப்பை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இளைஞர்களின் சக்தி அதிகம். அவர்களின் விருப்பம் என்ன என்பது தேர்தல் வெற்றியில் பிரதிபலித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு நடைபெற்ற 18வது தேர்தல், இந்திய ஜனநாயகத்தின் ஆழ்ந்த வேர்களை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் 64 கோடி மக்கள் தங்கள் வாக்களித்து தங்கள் உரிமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல் திருவிழாவில் இந்திய மக்கள் பங்கேற்றதைப்போன்று நாட்டின் வேறு எந்த பகுதியிலும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டார் மோடி.

இந்த விழாவில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.