/

ஆட்சி போனாலும் காங்கிரஸின் ஆணவம் குறையவில்லை: பிரதமர் மோடி

பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும், அக்கட்சியின் ஆணவம் குறையவில்லை என்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:20 am

ANI


பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கைவிட்டுப் போன பிறகும், அக்கட்சியின் ஆணவம் குறையவில்லை என்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்களவையில் இன்று, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்தும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார்.

அப்போது, தமிழகத்தில் பாஜக ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது என ராகுல் காந்தி கூறியிருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது, 1962-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்கமுடியவில்லை. பல இடங்களில் காங்கிரஸ் கட்சியை ஆளும்கட்சியாக்க மக்களே விரும்பவில்லை. ஆட்சி போனாலும் காங்கிரஸ் கட்சியின் ஆணவம் போகவில்லை.

கரோனா என்பது உலக பேரிடர். ஆனால், அதனை அரசியல் கட்சி பிரிவினைக்குப் பயன்படுத்திக் கொண்டது. காங்கிரஸ் கட்சி, முதல் கரோனா அலையின்போது, அனைத்து எல்லைகளையும் தாண்டி அரசியல் செய்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப தூண்டிவிட்டது காங்கிரஸ் கட்சிதான்.

மக்கள் ஏன் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளார்கள் என்று அந்தக்கட்சி சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

இந்திய மக்கள், ஜனநாயகத்தின் மீது பல நூற்றாண்டு காலமாக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். ஆனால், கண்பார்வையற்ற எதிர்க்கட்சியோ, ஜனநாயகத்தை அவமரியாதை செய்துவிட்டது.

கரோனா தொற்றுக்குப் பின்னர் நிலைமை சீராகி வரும் நிலையில், உலக நாடுகள் மிகவும் வேகமாக புதிய உலகை நோக்கி முன்னேறி வருகின்றன. இந்த நல்வாய்ப்பை இந்தியா ஒருபோதும் இழந்துவிடாது என்றும் மோடி பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.