பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

போர்டிங் பாஸ் இல்லாமலே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கலாம்!

2021ல் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ், விமான டிக்கெட் என பயணிக்க எந்த ஆவணங்களும் தேவைஇருக்கது என்று விமான நிலைய இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:17 pm

Muthumari

2021ல் சென்னை விமான நிலையத்திலிருந்து பயணிக்க, போர்டிங் பாஸ், விமான டிக்கெட் என பயணிகளுக்கு எந்த ஆவணங்களும் தேவை இருக்காது என்று விமான நிலைய இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். 

டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களை அடுத்து சென்னை 4வது பரபரப்பான விமான நிலையம் ஆகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 30,000 பயணிகள் வந்து செல்வதாகவும், கடந்த நிதியாண்டில் சுமார் 2 கோடி பயணிகள் வந்து சென்றதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே இடத்தில் உள்நாட்டு  மற்றும் பன்னாட்டு முனையங்கள் இருப்பது சென்னை விமான நிலையத்தில் மட்டுமே. மேலும், ஏற்கனவே உள்ள 4 டெர்மினல்களுடன் இரண்டு சேட்லைட் டெர்மினல்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் பட்சத்தில் வருடத்திற்கு 4 கோடி பயணிகள் வந்து செல்வர் என கணக்கிடப்பட்டுள்ளது. 

Story image

இதற்கிடையே, பல்வேறு போக்குவரத்து சேவைகளில் மத்திய அரசு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது. அந்த வகையில், விமானத்தில் நுழையும் பயணிகள் ஆட்டோமேட்டிக் ஸ்கேனிங் தொழில் நுட்பம் மூலம் முகத்தை பதிவு செய்து ஆவணங்கள் எதுவும் இன்றி விமானத்தில் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குநர் எஸ்.ஸ்ரீகுமார் கூறுகையில், 'இந்தியாவில் விமானப் பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி ஆவணங்கள் இன்றி பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'Digi yatra' என்ற புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை தவிர விஜயவாடா, வாரணாசி, கொல்கத்தா மற்றும் புனே ஆகிய விமான நிலையங்களில் இது செயல்படுத்தப்பட உள்ளது. 2021ம் ஆண்டிற்குள் சென்னையில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும். 

முதலில், தெற்கே இது விஜயவாடாவில் செயல்படுத்தப்பட்ட பின்னர், திட்டம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, தேவைப்படும் பட்சத்தில் அதில் மாற்றம் செய்து பின்னர் சென்னை உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களில் கொண்டு வரப்படும். 

Story image

விமான நிலையங்களில் பயணிகளின் டிஜிட்டல் பயணத்திற்கான மத்திய அரசின் ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இதற்காக, விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் முன்னதாக, ஆதார் கார்டு, பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி 'டிஜி யாத்ரா' தளத்தில் ஒரு தனிப்பட்ட அடையாள அட்டையை பெற வேண்டும்.

பயணிகள் இதனைப் பயன்படுத்தி, விமானத்தில் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். விமான நிலையத்தின் முகப்பு வாயிலில் உங்களது விபரங்கள் சரிபார்க்கப்படும். முக்கியமாக முக சரிபார்ப்பு நடைபெறும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாக உங்களது முக ரேகை பதிவு செய்யப்படும். 'டிஜி யாத்ரா' தளத்தில் பெறப்படும் அடையாள அட்டையே போர்டிங் பாஸாக செயல்படும். இதன் மூலமாக செக் இன் செய்யப்படும் நேரம் சேமிக்கப்படும். பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. டிஜி யாத்ரா ஏற்கனவே பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திலும் சோதனைக்காக தொடங்கப்பட்டுள்ளது. போலி டிக்கெட்டுகள் உருவாவதை இதன்மூலம் தடுக்க முடியும். அதேபோன்று, மற்றொருவரின் போர்டிங் பாஸை சிலர் பயன்படுத்துவதை இது தடுக்கும்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.