நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காப்பக வழக்கில் எஃப்ஐஆர் பதியாத பிகார் அரசு: வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்

பிகாரில் இருக்கும் சிறார் காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:44 pm

ENS


புது தில்லி:  பிகாரில் இருக்கும் சிறார் காப்பகங்களில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கியது.

டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிகாரில் உள்ள 17 சிறார் காப்பகங்களில் 9 காப்பகங்களில் இருந்த சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பிகார்  அரசு வழக்குரைஞரிடம் நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்.

அதாவது, முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யாமல் மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? இது அவமானகரமானது. குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள். ஆனால் நீங்களோ ஒன்றுமே இல்லை என்கிறீர்கள். எப்படி உங்களால் இதைச் சொல்ல முடிகிறது? இது மனிதாபிமானமற்றச் செயல். இது மிகக் கவனத்தோடு அணுக வேண்டிய விஷயம் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டோம். இது மிக முக்கியமான விஷயம் இல்லையா? ஒவ்வொரு முறையும் இந்த கோப்பைப் படிப்பது மோசமான விஷயம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அடுத்த 24 மணி நேரத்துக்குள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 377 (பலாத்காரம்) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும். இல்லை என்றால் அரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என்று தெரிவித்துள்ளனர்.

முசாஃபர்பூர் பகுதியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மும்பையைச் சேர்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக தெரிய வந்தது. அதையடுத்து அங்கிருந்த 42 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், பிகாரில் இருக்கும் 9 காப்பகங்களில் இருக்கும் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது விசாரணையில் தெரிய வந்திருப்பதை அடுத்து, மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.