இந்தப் பயிற்சியின் போது சைக்கிள் ஓட்டுவதற்கு முன்பும், பின்பும் அவர்களது உடலில் நிகழும் மாற்றங்கள் குறித்து ஆராய அவர்களது சிறுநீர் சாம்பிள் ஆராய்ச்சிக்காகப் பெறப்பட்டது. அது மட்டுமல்ல அவர்கள் தங்களது சைக்கிள் பயிற்சியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எத்தனை விரைவாக முடிக்கிறார்கள் என்பதும் கணக்கிடப்பட்டது. நிகழ்வின் முடிவில் ஆய்வில் பதிவு செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் போட்டியில் கலந்து கொண்டவர்களின் உடல் மற்றும் மனநலனில் நிகழ்ந்த மாற்றங்கள் கணக்கிடப்பட்டன. அதனடிப்படையில் பார்க்கையில், அடிக்கடி நீர் அருந்த வேண்டும் எனும் தாக உணர்வைப் புறம் தள்ளி தங்களது சைக்கிள் பயிற்சியை விரைவாக முடித்தவர்களுக்கும், உரிய நேரத்தில் நீர் அருந்தி தங்களது தாகத்தை ஒத்திப் போடாதவர்களுக்கும் இடையே அவர்களுக்கு இடப்பட்ட டாஸ்கை முடிப்பதில் பெரிதாக வேறுபாடு இல்லையென்றாலும் உடற்பயிற்சியின் காரணமாக அவர்களுக்கு கிடைக்கவிருக்கிற புலனுணரும் திறனில் மிகப்பெரிய மந்தநிலை காணப்படுவது கண்டறியப்பட்டது. காரணம் அவர்களின் உடலின் தேவையை புறக்கணித்து அதன் நீர்ச்சத்துக் குறைப்பாட்டை தாங்களே வரவழைத்துக் கொண்டவர்களாகி விட்டார்கள். இவர்களால் பயிற்சியின் ஆரம்ப கட்டங்களில் நீர்ச்சத்துக் குறைபாடு இல்லாதவர்களுக்கு இணையாக செயல்பட முடியுமே தவிர நேரமாக ஆக நீர்ச்சத்துக் குறைவால் மூளை விரைவாகச் சோர்வடைந்து உற்சாகம் குன்றி மிகுந்த உடற்சோர்வுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகி விட நேர்கிறது. இது அவர்களது ஆரோக்யத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.