தமிழ் செய்திகள்
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
மறுபுறம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அதிமுக, திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேர்தலை சந்தித்து ஒரு தொகுதியில் மட்டும் வென்றுள்ள பாஜக, யார் ஆட்சி அமைத்தாலும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சி, அதே நோக்கத்துடன் சட்டமன்ற தேர்தலிலும் களம் கண்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகளை கட்சியானது, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான எந்தவொரு வாய்ப்பினையும் அதிகாரத்தையும் மக்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தலில் வழங்கவில்லை என்று கருதுகிறோம்.
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், தேர்தல் முடிவுகளையும் நாங்கள் உளமார மதிக்கிறோம். எனவே, தமிழக பாரதிய ஜனதா கட்சியானது தமிழ்நாட்டில் புதிய அரசை அமைப்பதற்கான எந்தவொரு முயற்சியிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை ஆட்சி அமைக்கும் எவ்வித முயற்சியிலும் கட்சியானது எவ்வித நேரடிப் பங்களிப்பையும் மேற்கொள்ள விரும்பவில்லை.
மேலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்பதையும் மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
We will not support anyone who forms the government in Tamil Nadu! — BJP Statement
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










