பிரதமர் நரேந்திர மோடி கோவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உட்பட பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், உட்பட கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமார் 5 லட்சம் பேர் அமரும் விதமாக மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதில் பேசிய பிரதமர் மோடி, ”தமிழ்நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றி திமுகவின் வெளியேற்றம்.
இன்று நம்மவர்களிடையே நான் என்னுடைய வருத்தத்தையும் ஆதங்கத்தையும் முன்வைக்கிறேன். 2023 ஆம் ஆண்டிலே நாம் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றினோம். இந்த மாதம் 16 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்கள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடும் வரலாற்றுப்பூர்வமான அடியினை நாம் எடுத்துவைத்தோம்.
இதில், எல்லா பாராட்டுகளையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என அனைத்துக் கட்சிகளிடமும் நான் தெளிவாகக் கூறினேன். நான் விரும்பியது ஒன்றே ஒன்று. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த என் சகோதரிகள் நாடாளுமன்றத்திற்கும் சட்டப்பேரவைகளுக்கும் வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த உயர்வான முயற்சி தோல்வியடைந்தது. திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெறுப்பு அரசியலுக்கும் மலிவான அரசியலுக்கும் அதனை இரையாக்கினார்கள்.
இந்த மசோதா சட்டமாகியிருந்தால் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களாக ஆகியிருப்பார்கள். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்திற்கு அதிக மக்களவைத் தொகுதிகள் கிடைப்பதாக இருந்தது. ஆனால், இதை திமுக விரும்பவில்லை. இப்போது திமுகவின் செயல்கள் தெளிவாக அம்பலமாகிவிட்டது. குட்டு வெளிப்பட்டுவிட்டது.
கருப்பு உடைகள் அணிந்து திமுக தங்களின் தீய எண்ணங்களுக்குத் திரை போட்டுவிட முடியாது என்று அவர்களுக்கு நான் கூறிக்கொள்கிறேன். உங்களின் கெட்ட செயல்களின் பலன்களிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகங்களை தெரிந்துகொண்டு விட்டார்கள். பொய்களைப் பேசும் திமுகவால் இனிமேல் புனைசுருட்டுகளை மறைக்கமுடியாது.
இது எங்களுடைய போராட்டத்தின் முடிவு அல்ல. தொடக்கம்தான். பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் உங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருவார்கள். இது எங்களுடைய உறுதிப்பாடு.
இந்நிகழ்வு முடிவடைந்த பிறகு 8.30 மணிக்கு நான் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறேன். இந்த விஷயம் பற்றி விரிவாக நான் நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன். தவறாமல் கேளுங்கள்.
இன்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள திமுகவிடம் எந்த சாதனைகளும் கிடையாது. நம்மீது குற்றம் சொல்ல உண்மையான எந்தக் காரணமும் இல்லை. அதனால்தான் தமிழ்நாட்டின் இருக்கைகள் குறைப்பு பற்றி பொய்யான பயங்களைப் பரப்பி வருகிறார்கள்.
தற்போது இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தக்கவைக்கப்பட வேண்டும் என திமுக முன்பு கூறியது. அதன் அடிப்படையில் தான் நாங்கள் மசோதாவை முன்வைத்தோம். ஆனால், அப்போது ஒன்றைச் சொன்னார்கள். இப்போது மாற்றிப் பேசுகிறார்கள்.
சாதாரணப் பெண்கள் உயர்வடைந்தால் ஏன் காங்கிரஸ் - திமுகவிற்கு எரிகிறது? ஏனென்றால் இந்த ஒற்றைக் குடும்பக் கட்சிகள், அதிகாரம் தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டிலே பெண்கள், குழந்தைகள் குற்றவாளிகளால் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர். வன்முறை மற்றும் குற்றங்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலம் பெண்களுக்குத் தீங்கு இழைக்கிறது திமுக. நாடாளுமன்றத்தில் கூட திமுக பெண்களுக்கு எதிராக இருக்கிறது. இதற்கான சரியான பதில் அவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் மசோதாவை ஏன் எதிர்த்தார்கள் என திமுகவினரை எங்கே பார்த்தாலும் கேள்வி எழுப்புங்கள். இதற்காக ஏப்ரல் 23 அன்று தெளிவான, உறுதியான பதிலை அவர்களுக்கு அளியுங்கள்.
இந்திய வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கியமான சிறந்த என்ஜினாக இருந்து வருகிறது. கடைசி 11 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ. 14 லட்சம் கோடிக்கும் அதிகமாக நிதி வழங்கியுள்ளது. இது நிதிப் பகிர்வாக நெடுஞ்சாலைகள், ரயில்வே துறை மற்றும் நலத்திட்டங்களாக அளிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் திமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட நிதியைவிட இது பலமடங்கு அதிகம்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் இரு விஷயங்கள் அதிகரித்து சாதனை படைத்துள்ளன. ஒன்று, ஒரு குடும்பத்தின் சொத்து. மற்றொன்று தமிழ்நாட்டின் கடன். தமிழ்நாட்டின் உச்சபட்ச குடும்பம் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் ஒவ்வொருவர் மீதான கடனோ மேலும் மேலும் கூடிக்கொண்டே போகிறது.
குடும்பத்திற்கு, குடும்பத்தால், குடும்பத்திற்காக என்பதே திமுகவின் கொள்கை. முதல்வர், துணை முதல்வர், மக்களவை எம்.பி.க்கள் என அனைவரும் ஒரே குடும்பம். திரைப்படங்கள், ஊடக நிறுவனம் என பல துறைகளை ஒரே குடும்பம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எந்தளவிற்கு என்றால் திமுகவின் மூத்த தலைவர்கள் கூட ஒரு குடும்பத்தின் இளையவர்களிடம் தலை தாழ்த்தி நடந்துகொள்ளவேண்டியுள்ளது.
இங்கு ஒரு குடும்பத்தில் மருமகன் மற்றும் மகனுக்கிடையே பெரிய போட்டி நிலவுகிறது. யார் அதிகமாக கொள்ளையடிக்கிறார்கள் என்ற போட்டியே அது.
இந்த விஷயத்தில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரு கட்சிகளிலும் மருமகன்கள் அதிசயங்களை நிகழ்த்தியுள்ளனர். இந்தியா ஒரு மகனால் சலித்துப் போய்விட்டது, தமிழ்நாடு ஒரு மருமகனால் சலித்துப்போயிருக்கிறது. எந்தவித அரசியல் பின்புலமும் இல்லாமல், தென்னை நார் வாரியத்தின் தலைவராக இருந்து அதை வளர்ச்சி பெறச் செய்த கோவை மண்ணின் மைந்தன் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராக உயர்ந்திருக்கிறார்.
திமுகவின் ஊழல் மலிந்த அரசியலை கோவை மக்கள் புறக்கணித்து வந்துள்ளனர். இதனால் கோவையை அரசியல் பழிவாங்கும் நோக்குடன் திமுக அணுகுகிறது. திமுகவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கோவை மக்களை அண்மையில் அவமானப்படுத்தினார். இப்போது தேர்தலுக்காக டாஸ்மாக் ஊழலில் பெயர்பெற்ற ஒரு அரசியல்வாதியை கோவைக்கு அனுப்பியுள்ளனர்.
இரட்டை என்ஜின் அரசு இருந்தால்தான் ஒரு மாநிலத்தில் வேலை வேகமாக நடைபெறும். மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடையும், இதனால் மக்களுக்கு ஆதாயம் அதிகமாகக் கிடைக்கும். உதாரணமாக வீடுகளில் செயல்படுத்தப்படும் பிரதமரின் சூரியசக்தி மின்திட்டத்தால் கோவையில் 8 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் கிடைத்துள்ளது. இதனால் அந்த வீடுகளுக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் வரை மின்சார கட்டணம் சேமிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.19 கோடி சேமிக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 1 லட்சம் குடும்பங்களை அடைந்தால் மக்கள் சேமிக்கும் தொகை ரூ.250 கோடியாக உயரும். அரசின் நிதிச்சுமை குறையும். அந்த நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
கிடைக்கும் மிகையான மின்சாரத்தை கோவை தொழில் அமைப்புகள் பயன்படுத்தலாம். இதனால் முதலீடு, வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதாரம் வளரும். இதுபோல கோடிக்கணக்கான மக்களுக்கு வங்கிக் கணக்கு, குடிநீர், எரிவாயு இணைப்பு, முத்ரா கடன் போன்றவை கிடைத்து அவற்றின் மூலம் நல்ல தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை தாமதமில்லாமல் நிறைவேறினால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் பயன் பெறுவார்கள், அதன் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறும்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ரூ.12 லட்சம் வருமானத்துக்கு ரூ.2 லட்சம் வரி செலுத்த வேண்டியிருந்தது. தற்போது ரூ.12 லட்சம் வரை வரியே கிடையாது. அவை மக்களின் நேரடி சேமிப்பாக உள்ளது. அதேபோல் ஜிஎஸ்டியை குறைத்து மக்களுக்கு அதன் பலன்களை நேரடி நிவாரணமாக கொடுத்துள்ளோம். வரி குறைப்பால் மக்களின் செலவு குறைகிறது. அதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கிறது.
மக்கள் அதிக முதலீடு செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட முடிகிறது. இதனால் தொழிற்சாலை ஊக்கம் பெற்று உள்ளூர் சந்தை வாய்ப்புகள் பெருகுகின்றன.
இது மாநிலத்தின், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலான அனைத்துத் தரப்பு மக்களின் உடல்நலன் மீதும் அரசு அக்கறை கொள்கிறது. குறைந்த விலையில் மருந்துகள் விற்கும் மக்கள் மருந்தகங்கள் மூலம் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் சேமிக்கப்படுகிறது. இலவச டயாலிசிஸ், இருதய ஸ்டென்ட், செயற்கை மூட்டுகளின் விலை குறைப்பால் மக்களுக்கு லட்சக்கணக்கில் பணம் மீதமாகிறது.
திமுக அரசு விவசாயிகள் மீது அக்கறை கொள்ளவில்லை. ஆனால் டபுள் என்ஜின் அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த கோவை மண்ணில் இருந்து தமிழக மக்களுக்கு நான் சில உத்தரவாதங்களை அளிக்கிறேன். நீங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர் செய்வோம். நில அபகரிப்பு, மணம் கடத்தல், மதுபான மாஃபியாக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவோம். இது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும். திமுக அரசு பணியிட மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான ஊழல், மோசடி வழக்குகளும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நியமனங்களுக்கும் ஒளிவு மறைவில்லாமல் நடைபெறும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இங்குள்ள ஒவ்வொருவரும் மற்ற வாக்காளர்களிடம் இதுபற்றி விளக்க வேண்டும். ஏப்ரல் 23 ஆம் தேதி வரலாறு காணாத அளவுக்கு அதிகப்படியான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் இணைந்து வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டை, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்றார்” என்று அவர் பேசினார்.
Summary
Women's Reservation Bill... DMK-Congress Alliance Made It Prey to Hate Politics: Prime Minister Modi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மத்திய அரசின் திட்டங்களை தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி

மார்ச் 11ல் என்டிஏ தேர்தல் பிரசார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பிரதமர் மோடி பட்டியலிட்ட திமுக அரசின் மோசடிகள்!

ஊழல் செய்வதில் திமுக அமைச்சர்களிடையே போட்டி : பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

