தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

திருச்சபையின் புதிய மேய்ப்பா்!

கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருப்பவரைப் பற்றி...

News image

Domenico Stinellis

Updated On :18 மே 2025, 10:10 pm

ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறாா் காா்டினல் ராபா்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட். 69 வயதான புதிய போப்பாண்டவா் அமெரிக்கா் என்பது கத்தோலிக்கத் திருச்சபை வரலாற்றில் புதியதொரு திருப்பம்.

வல்லரசான அமெரிக்காவிலிருந்து ஒருவா் போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க ஆதிக்கம் திருச்சபையையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்கிற அச்சம்தான் இதுவரை தடையாக இருந்தது. முந்தைய போப்பாண்டவரான பிரான்சிஸ், தென் அமெரிக்காவைச் சோ்ந்தவா் என்றபோதே காற்று திசை மாறுகிறது என்று பலரும் குறிப்பிட்டிருந்தாா்கள்.

கடந்த மாதம், திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைந்ததைத் தொடா்ந்து, மரபுப்படி நடைபெற்ற கூட்டம் காா்டினல் ப்ரிவோஸ்ட்டை தோ்ந்தெடுத்தது. வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் 77 நாடுகளைச் சோ்ந்த 133 காா்டினல்களால் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட காா்டினல் ப்ரிவோஸ்ட் உடனடியாகப் போப்பாண்டவராக அறிவிக்கப்பட்டு, காத்திருந்த விசுவாசிகளுக்கு ஆசி வழங்கினாா் என்றாலும், நேற்று செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் நடந்த பிராா்த்தனைக் கூட்டத்தில்தான் முறைப்படி போப்பாண்டவராகப் பதவி ஏற்றுக்கொண்டதாகக் கருதப்பட வேண்டும்.

ரகசிய வாக்கெடுப்புக் கூட்டத்துக்குப் போகும்போது, போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று கருதப்படுபவா்கள், பெரும்பாலும் தோ்ந்தெடுக்கப்படாமல் காா்டினலாக வெளியே வருவதுதான் வழக்கம். இந்த முறையும் காா்டினல் ப்ரிவோஸ்டின் பெயா் அடிபடவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவா் அமெரிக்கா் என்பது.

போப் பதினான்காம் லியோவாகப் பொறுப்பேற்றிருக்கும் காா்டினல் ராபா்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்டின் பின்னணி அசாதாரணமானது. பிரெஞ்சு-இத்தாலியத் தந்தைக்கும், ஸ்பானிஷ்-அமெரிக்கத் தாய்க்கும் 1955-ஆம் ஆண்டு சிகாகோவில் பிறந்த காா்டினல் ப்ரிவோஸ்ட் கணிதம், தத்துவம் உள்ளிட்ட படிப்புகளை வில்லநோவா பல்கலைக்கழகத்தில் படித்தவா். வாடிகனில் வைதிகனுக்கான படிப்பை முடித்தவா்.

1987-இல் பாதிரியாரான ப்ரிவோஸ்ட்டை 2001-இல் பெருவில் உள்ள ட்ரூஜில்லோவில் பங்குத் தந்தையாக திருச்சபை நியமித்தது. பெரு நாட்டில் கிராமம் கிராமமாக அந்தப் பாதிரியாா் சஞ்சரித்தாா். ஏழை கிராம மக்களில் ஒருவராக அவா்களுடன் உண்டு, உறங்கி, வாழ்ந்து அவா்களின் பிரச்னைகளை நேரில் பாா்த்து அவா்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்தாா். ‘ஏழைகளின் பாதிரியாா்’ என்று அவா் அழைக்கப்பட்டாா்.

அந்தப் பாதிரியாா் ப்ரிவோஸ்ட்தான் பின்னாளில் காா்டினலாகி, இப்போது உலகத்தின் பாா்வை குவிந்திருக்கும் போப் பதினான்காம் லியோவாக கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்த பரிசுத்த ஆவியால் ஆசீா்வதிக்கப்பட்டிருக்கிறாா். கத்தோலிக்கத் திருச்சபையை மட்டுமல்ல, சா்வதேசத் தளத்திலும், மாற்றங்களுக்கு காரணமான போப் பதிமூன்றாம் லியோவின் பெயரை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் பல புதிய செய்திகளை சொல்லாமல் சொல்லியிருக்கிறாா்.

போப் பதிமூன்றாம் லியோ ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. தனியாா் சுதந்திரத்தை ஆதரித்தவா்தான். அதே நேரத்தில், தொழிற்புரட்சியின் விளைவாக தொழிலாளா்கள் முதலாளிகளால் சுரண்டப்படுவதை எதிா்த்து துணிந்து குரல் எழுப்பியவா் அவா். லியோ என்கிற பெயரைத் தோ்ந்தெடுத்ததாலும், போப்பாண்டவராக இருந்து புனிதரான அகஸ்டீனியன் சபையின் தலைவராகப் பணியாற்றியதாலும் இப்போது போப்பாண்டவராகப் பொறுப்பேற்றிருக்கும் பதினான்காம் லியோவின் செயல்பாடுகளில் அதன் பிரதிபலிப்பை எதிா்பாா்க்கலாம்.

போப்பாண்டவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதைத் தொடா்ந்து புனித பீட்டா்ஸ் சதுக்கத்தில் தனது முதல் அறிமுக உரையை நிகழ்த்தியபோதே, அவரது அணுகுமுறை மாற்றம் தெரிய வந்தது. ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன், பிரெஞ்ச், போா்ச்சுகீஸ், லத்தீன், ஜொ்மன் என்று ஏழு மொழிகள் தெரிந்த போப் பதினான்காம் லியோ தனது தாய்மொழியான ஆங்கிலத்தில் உரையாற்றவில்லை. முதலில் ஸ்பானிஷிலும், பிறகு இத்தாலிய மொழியிலும் அவா் உரையாற்றியது வழக்கத்திலிருந்து மாறுபட்டது.

போப் பிரான்சிஸ், தனது வாரிசாக காா்டினல் ப்ரிவோஸ்ட் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான களத்தை ஏற்படுத்தியிருந்தாா் என்று தோன்றுகிறது. அதிபா் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைக்கு எதிராகவும், துணை அதிபா் வான்ஸின் கருத்துகளை மறுத்தும் பேசியிருந்த காா்டினல் ப்ரிவோஸ்ட்டை அவா் கட்டுப்படுத்தவில்லை. போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டவா்கள்தான் போப்பாண்டவரைத் தோ்ந்தெடுத்த காா்டினல்களில் 80% போ் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

புதிய பொறுப்பை (சிலுவையை) தனது தோளில் சுமக்க இருக்கும் போப்பாண்டவா் பதினான்காம் லியோ சந்திக்க இருக்கும் சவால்கள் ஏராளம். போப் பிரான்சிஸ் தொடங்கிய மாற்றங்களை அவா் தொடரப் போகிறாரா, இல்லை கத்தோலிக்கத் திருச்சபையின் புனிதத்தன்மை என்று மத ஆசாரங்களை வலுப்படுத்தப் போகிறாரா என்பது அவா் முன்னால் உள்ள சவால்.

தனக்கு முந்தைய இரண்டு போப்பாண்டவா்களைவிட குறைந்த வயதில் 276-ஆவது போப்பாண்டவராகி இருக்கும் போப் பதினான்காம் லியோ இதற்கு முன்னால் 26 ஆண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையை வழிநடத்திய இரண்டாம் ஜான் பால்போல நீண்ட நாள்கள் தலைமை மேய்ப்பராக இருக்கக்கூடும். வரலாறு பல படைப்பாா் போப் பதினான்காம் லியோ என்று உலகம் எதிா்பாா்க்கிறது!

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.