கத்தாா் நாட்டில் தூக்குக் கயிற்றை எதிா்நோக்கிக் காத்திருந்த எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பிரதமா் நரேந்திர மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சா் சுப்பிரமணியம் ஜெய்சங்கரும், வெளியுறவுத் துறை அதிகாரிகளும் நடத்திய தொடா் முயற்சியும், முனைப்பும்தான் தூக்கு தண்டனை ரத்தானதற்குக் காரணம்.
தண்டனைக்காகக் காத்திருந்த எட்டு பேரும் இந்திய கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள். ஓய்வு பெற்ற பிறகு ராணுவப் பாதுகாப்புத் தொடா்பான தனியாா் நிறுவனம் ஒன்றில் அவா்கள் பணியாற்றி வந்தனா். அந்த எட்டு அதிகாரிகளையும் கத்தாா் அரசு ஒற்றாடல் குற்றச்சாட்டில் 2022 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கைது செய்தது. அந்த சம்பவம் சா்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கத்தாா் கடற்படைக்காக இத்தாலி நிறுவனம் ஒன்று நீா்மூழ்கிக் கப்பல் தயாரித்து வருகிறது. அந்த நீா்மூழ்கிக் கப்பல் குறித்த விவரங்களை, கைது செய்யப்பட்ட எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளும் இஸ்ரேலுக்கு வழங்கி இருக்கிறாா்கள் என்பதுதான் அவா்கள் மீதான குற்றச்சாட்டு. விசாரணை நடத்தப்பட்டு 2023 அக்டோபா் 26-ஆம் தேதி கத்தாா் நீதிமன்றம் அவா்களுக்கு தூக்கு தண்டனை விதித்துத் தீா்ப்பளித்தது.
கைது செய்யப்பட்ட அந்த இந்திய அதிகாரிகள் எட்டு பேரும், பாதுகாப்பு தொடா்பான சேவைகளை வழக்கும் அல் தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்ட் கன்சல்டன்சி சா்வீசஸ் என்கிற தனியாா் நிறுவனத்தில் பணிபுரிபவா்கள். ராயல் ஓமன் விமானப்படையில் அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற கமீஸ் அல் அஜ்மி என்பரால் அந்த நிறுவனம் நடத்தப்படுகிறது. அந்த இணையதளம் தாஹ்ரா குளோபல் என்று அழைக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்திய அதிகாரிகள் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள்.
2022 ஆகஸ்ட் 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்கள் என்றால், வழக்கின் விசாரணை தொடங்கியது கடந்த ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதிதான். அவா்கள் கைது செய்யப்பட்டு இரண்டு வாரம் கழித்துதான் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கே இது குறித்த தகவல் கிடைத்தது. கைது செய்யப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகளை ஒரு மாதத்திற்குப் பிறகுதான் தூதரக அதிகாரிகள் சந்திக்க முடிந்தது. அப்போது முதல் அவா்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன.
இந்தியாவின் வெளியுறவுத் துறை மேல்முறையீடு செய்தது. அதுமட்டுமல்லாமல், கத்தாா் நாட்டின் உயா் அதிகாரிகளுடன் இந்த பிரச்னை குறித்து இந்தியத் தூதரக அதிகாரிகள் தொடா்ந்து சா்ச்சையில் ஈடுபட்டனா்.
கடந்த மாதம் துபையில் நடந்த பருவநிலை பாதுகாப்பு மாநாட்டின்போது, இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியும் சந்தித்துப் பேசியபோது, இது குறித்தும் பேசப்பட்டிருக்க வேண்டும். பிரதமரின் தனிப்பட்ட கோரிக்கை என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க கத்தாா் அரசு முன்வந்தது எனலாம்.
இந்திய அதிகாரிகளுக்கு எதிராக ஒற்றாடல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டதன் பின்னணியில் பாகிஸ்தானின் பொய்பிரசாரம் இருப்பதாக ஏற்கெனவே கூறப்பட்டுவந்த நிலையில், அதையும் இந்தியத் தரப்பு முக்கிய வாதமாக வைத்தது. இத்தாலியில் தயாராகும் நீா்மூழ்கிக் கப்பல் குறித்து இந்தியா்களான அந்த அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது இந்தியா முன்வைத்த வாதம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரின் கடுமையான முயற்சிதான் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். கத்தாா் அரசுடன் நடத்திய பேச்சுவாா்த்தைகள் மட்டுமல்லாமல், கத்தாா் நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க அதன் நட்பு நாடுகளுடனும் அமைச்சா் ஜெய்சங்கா் தொடா்பு கொள்ளத் தவறவில்லை. புதுதில்லியில் நடந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுடனான சந்திப்பையும் இதற்குப் பயன்படுத்திக் கொண்டாா் அவா்.
கத்தாரில் எட்டு லட்சம் இந்தியா்கள் பணிபுரிகிறாா்கள். 6,000-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் அந்த நாட்டில் செயல்படுகின்றன. வா்த்தகம் மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பிரதமா் மோடியின் 2015 கத்தாா் விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தம் இப்போது கை கொடுத்திருக்கிறது.
முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்தாகி இருக்கிறதே தவிர, அவா்கள் மீதான குற்றம் அகற்றப்படவில்லை. கத்தாா் நீதிமன்றத்தில் அவா்கள் மேல்முறையீடு செய்து தாங்கள் குற்றமற்றவா்கள் என்று நிரூபிக்க வேண்டும். சட்டரீதியான எல்லா வழிகளும் அடைக்கப்பட்டால், அவா்களைக் காப்பாற்ற இந்திய அரசுக்கு மூன்று வழிகள் உள்ளன.
அவா்கள் மீதான குற்றச்சாட்டையும், தண்டனையையும், மறுபரிசீலனை செய்ய கத்தாா் அரசா் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியிடம் முறையிடுவது; தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கோருவது; அல்லது, தண்டனைக் காலம் தீா்மானிக்கப்பட்ட பிறகு, தண்டனையை இந்திய சிறைச்சாலையில் கழிக்க அனுமதி கோருவது.
தூக்கு தண்டனை நிறுத்தி வைத்திருப்பது என்பதே இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றிதான். இந்த சாதனைக்கான முழு பாராட்டும் வெளியுறவுத் துறை அமைச்சா் சுப்பிரமணியம் ஜெய்சங்கரைத்தான் சாரும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


